சிங்கப்பூரர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 1,100 வாக்களிப்பு நிலையங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.
வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் பணிகளில் பொதுச் சேவை அதிகாரிகள் இன்று (ஜூலை 9) ஈடுபட்டனர்.
குடியிருப்புகளின் கீழுள்ள வெற்றுத் தளங்கள், சுற்றுப்புறக் கூடாரங்கள், பள்ளிகள், சமூக மன்றங்கள் போன்ற இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உடல்வெப்பநிலை சோதிக்கப்படுவது, பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றுக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு இடையிலான தொடர்பைக் குறைக்கும் நோக்குடன் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 880லிருந்து 1,100ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையமும் சராசரியாக 2,400 வாக்காளர்களுக்குச் சேவையாற்றும். முந்தைய தேர்தல்களில் இந்த எண்ணிக்கை 3,000 ஆக இருந்தது.
மொத்தம் 2.65 மில்லியன் பேர் நாளைய தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.
37.5 டிகிரி செல்சியசுக்கும் மேல் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்படும் வாக்காளர்கள், இரவு 7 முதல் 8 மணி வரை என்ற சிறப்பு நேரத்தில் வந்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.
வாக்குச்சீட்டைப் பெறுமுன் வாக்காளர்கள் கைச்சுத்திகரிப்பான் கொண்டு தங்களது கைகளைச் சுத்தம் செய்துவிட்டு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.