நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்று சேவையாற்ற தான் ஆவலாக இருப்பதாக பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தார்.
தன் கடமைகளை முழு ஆற்றலையும் பயன்படுத்தி நிறைவேற்றப்போவதாக அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு இன்று அதிகாலை திரு பிரித்தம் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் திரு பிரித்தம் சிங்குடன் தொடர்பு கொண்டு, புதிய நாடாளுமன்றத்தில் 10 எதிர்தரப்பு உறுப்பினர்கள் இருப்பதை அடுத்து திரு சிங்கை நாடாளுமன்ற எதிர்தரப்பு தலைவராக அங்கீகரிக்க தான் கருதுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரு பிரித்தம் சிங்கிற்கு உரிய அளவுக்கு ஊழியர்களும் வளங்களும் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தன்னுடன் தொடர்புகொண்டதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு சிங், “என்னுடைய தலைமைத்துவத்தின்கீழ் பாட்டாளிக் கட்சி சிங்கப்பூருக்கும் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருந்து வரும் என்று தெரிவித்தார்.
‘உங்கள் வாக்கு பலன் தரும்’ என்ற முழக்க வாசகத்துடன் களமிறங்கிய திரு சிங், “கொவிட்-19 சூழலில் நடக்கும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஓர் இடம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடிய வாய்ப்பு உண்மையிலேயே இருக்கிறது,’’ என்று பிரசாரம் செய்தார்.