கொவிட்-19: தொடர்பில்லாக் கண்காணிப்புடன் புதிய தனிமைப்படுத்தல் பிரிவு

1 mins read
cc4c4b17-f67a-4a30-be49-f16f7ff42e60
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (எஸ்ஜிஎச்) 50 தனிமைப்படுத்தும் அறைகளுடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய தனிமைப்படுத்தல் பிரிவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாகச்  சந்தேகிக்கப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (எஸ்ஜிஎச்) 50 தனிமைப்படுத்தும் அறைகளுடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய தனிமைப்படுத்தல் பிரிவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மற்ற தொற்றுநோய் பாதிப்பு இருப்போருக்கும் இந்தப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும்.

'வார்டு@போயர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரிவு, எஸ்ஜிஎச்சின் போயர் புளோக்கை ஒட்டி இருக்கும் கார் நிறுத்தப் பூங்காவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தத் தனிமைப்படுத்தல் பிரிவை அமைக்கும் பணிகள் கடந்த மே மாத மத்தியில் தொடங்கி, ஆறு வாரங்களில் நிறைவுபெற்றன.

ஒவ்வோர் எதிரழுத்த தனிமைப்படுத்தல் அறையும் 5.6 மீ. நீளமும் 2.3 மீ. அகலமும் 2.5 மீ. உயரமும் கொண்டது; கழிப்பறை, குளியலறை இணைக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் நிலைமை மோசமாவதற்கான அறிகுறிகளை நோயாளிகளின் உடலில் அணிவிக்கப்படும் உணர்கருவிகள் மூலம், தொடர்பில்லாக் கண்காணிப்பு முறை மூலம் மருத்துவக் குழு முன்னதாகவே கண்டறிய முடியும் என்பதால் முன்கூட்டியே அவருக்கு சிகிச்சையளிக்க முடியும்.

அத்துடன், நோயாளியின் நிலைமை குறித்த முக்கிய அறிகுறிகள் ஒரு திறன்பேசிச் செயலி வழியாக அனுப்பப்பட்டுவிடும்.

எஸ்ஜிஎச் தாதிமைப் பிரிவும் சுகாதார அமைச்சின் தகவல் தொடர்புப் பிரிவான ஒருங்கிணைந்த சுகாதாரத் தொடர்பு அமைப்புகளும் இணைந்து இந்த 'மைகேர் லைட்' செயலியை உருவாக்கியுள்ளன.

உதவி தேவைப்படும்போது மருத்துவக் குழுவினருடன் தொடர்புகொள்வதோடு, நோயாளிகள் நேரத்தைப் போக்க ஏதுவாக அந்தத் திறன்பேசிகளில் விளையாட்டுச் செயலிகளும் நிறுவப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்