ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிங்கப்பூர்- மலேசியா எல்லை மீண்டும் திறக்கப்படுவது குறித்த செய்திகள் இரு நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், வர்த்தகம், வேலை தொடர்பாக நீண்டகால அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் ஒவ்வொரு பயணத்தின் போதும் வேலை செய்யும் நாட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜோகூர் மேம்பாலம், துவாஸ் இரண்டாவது வழித்தடம் ஆகியவற்றில் தெளிவான, நடைமுறைக்கு ஏற்ற செயல்முறைகள் அமல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
“எல்லையை மீண்டும் திறப்பது நல்ல செய்தி. இது உள்ளூர் வர்த்தகங்கள் இயங்க உதவுவதுடன், சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு வேலைப் பாதுகாப்பையும் வழங்கும்,” என்று ஜோகூர் இந்தியர் வர்த்தக சங்கத்தின் தலைவரான (ஜிபா) திரு பி.சிவகுமார் கூறினார்.
“உள்ளூர் வர்த்தகங்கள், குறிப்பாக ஜோகூர் பாரு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களையே பெருமளவு நம்பியுள்ளன. எல்லை மூடப் பட்டிருப்பதால் பலரும் தங்கள் தொழில்களைக் கைவிடும் நிலையில் உள்ளனர்,” என்றார் அவர்.
எனினும், மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் பணியாற்றிய பின், குறுகிய கால விடுப்புக்காக மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது தேவையற்றது என அவர் சுட்டினார். நடமாட்டம் முக்கியம். ஆனால், மீண்டும் எல்லைகளைத் திறக்கும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது, செயல்பாட்டு நடைமுறைகளிலும் தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு பேட்டியில் திரு சிவகுமார் குறிப்பிட்டார்.
தற்போது வேலைக்காக சிங்கப்பூரில் வசிக்கும் பல மலேசியர்கள் ஏற்கெனவே வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சிரமப்படுகின்றனர். எல்லைகளை மீண்டும் திறக்கும்போது சிங்கப்பூரில் பணிபுரிபவர்கள், குறுகிய வருகைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு, பின்னர் மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றால், அதில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றார் அவர்.
அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் பாதுகாப்பான பயணத் தடத்தையும் குறிப்பிட்ட கால பயண ஏற்பாடுகளையும் பரஸ்பரம் இருநாடுகளும் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேனும் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
இந்த நடைமுறைகளின் செயல்பாட்டைப் பொறுத்து சிங்கப்பூர்- மலேசியா எல்லை முழுமையாகத் திறக்கப்படுவது அமையும் என்று திரு ஹிஷாமுதீன் நேற்று கூறினார்.
இவை செயல்பட, தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள எல்லைகளுக்கிடையிலான முதல், இரண்டாம் பிரிவு போக்குவரத்துஏற்பாடுகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவது முக்கியம் என்றார் அவர்.
குறிப்பிட்ட கால பயண ஏற்பாட்டின் கீழ், ஒரு வார காலத்தில் 400 மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் இருநாடுகளுக்கும் இடையே அத்தியாவசிய வர்த்தக, அதிகாரபூர்வ பயணங்களுக்கு அனுமதிக்கப்படுவர். வேலை பார்க்கும் நாட்டில் மூன்று மாதம் தங்கியிருக்கும் பாதுகாப்பான பயணத் திட்டத்தின் கீழ், நீண்டகால வேலை அனுமதிச் சீட்டு பெற்ற 2,000 பேர் தினமும் இரு பாலங்களையும் கடக்க அனுமதிக்கப்படுவர்.