ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாற்றங்களுடன் தீமிதித் திருவிழா; பக்தர்கள் பங்கேற்க முடியாது

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாற்றங்களுடன் தீமிதித் திருவிழா; பக்தர்கள் பங்கேற்க முடியாது

2 mins read
64cbb481-3251-47a9-b037-e8483a1a1752
இவ்வாண்டின் தீமிதி வைபவம் நவம்பர் 1ஆம் தேதி  நடைபெறும். படம்: தமிழ் முரசு -
multi-img1 of 3

கொரோனா கிருமிப் பரவல் காரணமாக, சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சில மாற்றங்களுடன் இவ்வாண்டின் தீமிதி திருவிழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

நூறாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் பாரம்பரியமிக்க இந்தத் திருவிழா தொடர வேண்டும் என்ற நோக்கில் வழக்கமான ஆரவாரமின்றி இந்தத் திருவிழா நடைபெற உள்ளது.

ஆம். தீமிதி விழாவின் நிகழ்வுகளில் பொறுப்பேற்கும் சிலர் மட்டுமே தீமிதி வைபவத்தில் பங்கேற்க முடியும். பக்தர்கள் பங்கேற்க இயலாது என்று வாரியத்தின் செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

அதேபோல, கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம், பெண்கள் தீக்குழியை வலம் வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் இவ்வாண்டு பக்தர்கள் செலுத்த இயலாது.

வழக்கம்போல தீமிதி வைபவம் நேரலையில் இணையம் வழியாக ஒளிபரப்பப்படும்.

அம்மன் வெள்ளி ரத ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், இடையில் எங்கும் நில்லாமலும் ரத வரிசை சமர்ப்பணம் இடம்பெறாமலும் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் தீமிதி வைபவம் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும். அதன் தொடர்பிலான நடவடிக்கைகள் பொதுவாக 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கும். ஆனால், தற்போதைய கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு, நடவடிக்கைகள் ஒரு மாதத்துக்கு முன்புதான் தொடங்கவுள்ளன.

தீமிதி விழாவுக்கான கொடியேற்றம் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் எனவும் விழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் நவம்பர் 5ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விதத்தில் அரசு வெளியிடும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தத் திருவிழா நடைபெறும் என்று வாரியத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்