சிங்கப்பூர் வாசிகள், இன்று முதல் சமூக நிலையங்கள் சமூக மன்றங்கள், வசிப்போர் குழுக்கள் ஆகியவற்றில் தேசிய நாள் அணிவகுப்பு 2020க்கான பைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
சமூக மன்றங்களில் ஆகஸ்ட் 2 வரையிலும் வசிப்போர் குழுக்களில் ஜூலை 26 வரையிலும் விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அவற்றைப் பெறலாம்.
கொவிட்-19 தொற்று காரணமாக இந்த ஆண்டு தேசிய நாள் அணிவகுப்பை வீடுகளுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டின் ஒரு பகுதியாக, தேசிய நாள் அணிவகுப்பு 2020 நிர்வாகக் குழு, 'ஒன்றிணைந்த சிங்கப்பூர் பை' என்ற அந்த அன்பளிப்புப் பைகளை சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் வழங்கும்.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு பையைப் பெறலாம். பைகளைப் பெற்றுக்கொள்ள அடையாள அட்டையைக் கொண்டு செல்வது அவசியம்.

