கொவிட்-19 சூழலில் வேலைகளைக் காக்கவும் ஊழியர்களுக்கு உதவவும் அரசாங்கள் உதவி வரும் வேளையில், பொதுவான குறிக்கோள்களை நோக்கி சந்தைகளையும் சமூகங்களையும் வழிநடத்தும் புதிய ஒன்றுபட்ட, முனைப்பான அரசாங்கம்தான் தேவை என்றும் நாடுகளின் அளவு ஒரு பொருட்டல்ல என்றும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19க்குப் பிறகான சூழலில் “ஒரு நிச்சயமான முனைப்புத்தன்மை,” அரசாங்கத்திடம் தேவை என்றார் அவர்.
வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்துவரும் பொருளியல்கள் ஆகிய இரண்டிலும் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்ற பொதுவான அம்சங்களில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட திரு தர்மன், உலக அளவில் சமநிலையற்ற கல்வி முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்புத் தரம், ஆசிரியர்கள் தரம் ஆகியவற்றில் இருக்கும் குறைபாடு, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அரசாங்கம் அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் சமுதாய பாதுகாப்பு அமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றில் அது மிகவும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு தர்மன், வரும் ஆண்டுகளில் அது இன்னும் மேம்படும் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு இன்னும் கூடுதலாக பங்களிக்க வேண்டும் என்றும் திரு தர்மன் கூறினார்.
சிங்கப்பூரில் வேலைக் காப்புறுதி போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கேள்விக்கு, மக்கள் நீண்டகாலத்துக்கு வேலையில்லாத நிலை இருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அத்தகைய காப்புறுதி பலனளிக்கும் என்று கூறியதுடன், சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதுடன், வேலைகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுக்கும் முனைப்பில் சிங்கப்பூர் அரசாங்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 6 முதல் 12 மாதங்கள் சிரமமான காலகட்டமாக இருக்கும் என்பதால், ஊழியர்களின் வேலைத் திறனை வளர்த்து வேலையில் அமர உதவும் வண்ணம் பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.