பாசிர் ரிஸ், ஈசூன், தெம்பனிஸ் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் பல குடும்பத்தினர் தண்ணீரைச் சுடவைத்தபோது அதிலிருந்து பாண்டான் வாசனை கிளம்பியதாகக் கூறியிருந்தனர்.
பொதுப் பயனீட்டுக் கழகம் அது பற்றி ஆராய்ந்து மலேசியாவில் இருந்து வந்த தண்ணீர்தான் அதற்கு காரணம் என்பதைக் கண்டுபிடித்தது. மலேசியாவிலும் இதுபோன்ற புகார்கள் இருந்ததாக கூறப்பட்டது.
அந்த வாடைக்கு ஒரு வகை கரிமக் கூட்டுப்பொருளே காரணம் என்றும் அந்தப் பொருள் தொழில்துறைகளில் பொதுவாக கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் விளக்கி இருக்கிறது.
மலேசியாவில் இருந்து வந்த நீரை ‘ஒதுக்கிவிட்டு’ தேவையை ஈடுசெய்ய உள்நாட்டில் தண்ணீர் உற்பத்தியை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
வாசனை நீர் வந்த தண்ணீர் குழாய்கள், அந்த நீர் தேங்கி இருந்த தண்ணீர் தொட்டிகள் முதலான பலவும் மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுத்தப்படுத்தப்பட்டு அவற்றில் உள்ளூரில் உற்பத்தியான தண்ணீர் அனுப்பப்பட்டது என்று கழகம் தெரிவித்தது.
தேவைக்கேற்ப உள்ளூரில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகக் கூறிய கழகம், எந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.
மலேசியாவில் ஓடும் ஜோகூர் ஆறுதான் சிங்கப்பூருக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய வளமாக இருக்கிறது.
கடல்நீரைக் குடிநீராக்குவது, பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிப்பது, 17 நீர்த்தேக்கங்களில் சேகரமாகும் மழை நீரை பயன்படுத்துவது ஆகியவை சிங்கப்பூரின் இதர தண்ணீர் வளமாக இருக்கின்றன.
இதனிடையே, சிங்கப்பூரின் நீர் ஆலைகளில் இருந்து வழங்கப்படும் தண்ணீரில் எந்த வாடையும் இருக்காது என்று நேற்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.