சிங்கப்பூரில் தாதியரின் சேவைக்கு, குறிப்பாக கொவிட்-19 நெருக்கடி காலத்தில் அவர்களது அர்ப்பணிப்புக்கு, நன்றி தெரிவித்துக்கொண்டார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
‘தாதியர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுவதை வாய்ப்பாகக் கொண்டு தமது ஃபேஸ்புக் பதிவில் காணொளி ஒன்றைப் பதிவேற்றினார் அவர். டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையம் ஆகியவற்றில் நடைபெற்ற மெய்நிகர் தாதியர் தினக் கொண்டாட்டத்தையொட்டி அந்தக் காணொளியைப் பதிவிட்டார் அவர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் கொவிட்-19 முதல் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து நமது தாதியர் ஓய்வின்றி முன்களத்தில் பணியாற்றுவதைக் குறிப்பிட்ட அவர், “சாத்தியமில்லாதது போலத் தோன்றிய சூழலை சாத்தியமாக்கிக் காட்டி, கொவிட்-19 நெருக்கடியைக் கையாள உதவினர்,” என்றார்.
“உங்களது முழு கடப்பாட்டுடன், நாம் எதையும் சாதிக்க முடியும்,” என்று காணொளியில் குறிப்பிட்டார் துணைப் பிரதமர்.
2016ஆம் ஆண்டு தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது தாதியர் அன்புடன் கவனித்துக்கொண்டதை திரு ஹெங் நினைவுகூர்ந்தார்.
2016ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, திரு ஹெங் பக்கவாதம் ஏற்பட்டு, நிலைகுலைந்து சரிந்தார். டான் டோக் செங் மருத்துவமனக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, அமைச்சரவையில் இருந்த 3 மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
“தாதிமை என்பது ஒரு வேலை என்பதற்கும் மேல்,” என்று குறிப்பிட்ட திரு ஹெங், “நீங்கள் உங்கள் பணியை நல்ல முறையில் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.