சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 5) நண்பகல் நிலவரப்படி புதிதாக 908 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,254 ஆகியுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிருமித்தொற்று அதிகம் பரவியிருந்த தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். கொவிட்-19லிருந்து விடுதிகள் விடுவிக்கப்படும் நடைமுறைகளின் அங்கமாக அங்கு தங்கியுள்ளோருக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்பில், கிருமித்தொற்று எண்ணிக்கை குறைவதற்கு முன்பாக, வரும் நாட்களிலும் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்தது.
ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் விடுதிகளை கொவிட்-19லிருந்து விடுவிக்கும் பணி சீராக நடைபெறுவதாக அமைச்சு தெரிவித்தது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது. அவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு இருப்பவர்.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் மூவர் சார்ந்திருப்போர் அட்டை உடையோர், ஒருவர் குறுகிய கால வருகை அட்டை உடையவர்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.