சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட 13 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தை தொடங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியாவின் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித் தொற்று காரணமாக கடந்த மார்ச் 23ஆம் தேதி அனைத்துலக, உள்நாட்டு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. கடந்த மே 25ஆம் தேதி மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத் திட்டம்’ மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் இந்தியாவுக்கு அழைத்து வந்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு, ‘ஏர் பபுள்’ எனப்படும் முறையில் இருவழி விமானப் போக்குவரத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளுடன் விமானப் போக்குவரத்தைத் தொடங்கவும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, தாய்லாந்து, தென்கொரியா, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பீன்ஸ், ரஷ்யா, ஆகிய 13 நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக திரு ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.