கட்டாய கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனையைச் செய்ய 280 வெளிநாட்டு ஊழியர்கள் தவறியதற்காக அவர்கள் வேலையைத் தொடங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பலமுறை நினைவூட்டிய பிறகும் அவர்கள் பரிசோதனைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்ட கூட்டறிக்கையில், இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றுப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர்கள் வேலையைத் தொடர அனுமதிக்கப்படுவர்.
கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கான முன்பதிவை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோருக்கும் அட்டவணைப்படுத்தப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள், முந்தைய 14 நாட்களாக கிருமித்தொற்றுப் பரிசோதனையைச் செய்துகொள்ளாத ஊழியர்களுக்கு சிவப்பு நிற ‘ஆக்சஸ் குறியீடு’ வழங்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அப்படியென்றால், அவர்களால் வேலைக்குச் செல்ல முடியாமல் போகலாம்.
இன்றைய நிலவரப்படி சுமார் 82 விழுக்காடு அதாவது சுமார் 16,000 ஊழியர்கள் தங்களது ஊழியர்களுக்கான பரிசோதனைகளுக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த 18ஆம் தேதி இந்த எண்ணிக்கை 78 விழுக்காடு அதாவது சுமார் 15,000ஆக இருந்தது.
ஊழியர்களின் முதல் பரிசோதனைக்கு பதிவு செய்துவிட்டால், அடுத்தடுத்த பரிசோதனைகளுக்கு தேதி தாமாகவே ஒதுக்கப்படும்.
அத்துடன், நிறுவனங்களும் புதிய ஊழியர்களின் பரிசோதனைக்கான தேதிகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.