சிங்கப்பூரில் உள்ள ஆகப் பெரிய ஊழியர் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஜூலை 21 அன்று, அந்த விடுதி கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய குழுமத்தில் இருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; அந்தக் குழுமத்தில் ஏற்கெனவே 55 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று உள்ளூர் சமூகத்தில் பதிவான இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள், 2 சிங்கப்பூரர்கள் தொடர்பானது. அவர்களில் ஒருவர் 56 வயது பெண். தொழில்நுட்ப கல்விக் கழகம் காலெஜ் சென்ட்ரலில் பணிபுரிபவர். கடந்த புதன்கிழமை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்ட பிறகு, அவர் பணிக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரைப் பார்க்கும்போது கடும் சுவாசப் பிரச்சினைகள் இருக்கும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளின்போது அவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் 63 வயது சிங்கப்பூர் மாது. வேறோர் உடல் நலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவ்விருவரின் கிருமித்தொற்று தொடர்பு தடமறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று 50 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,266 ஆகியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பியபின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் ஈரானிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர்.
இருவர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள். ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், மற்றவர் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வைத்திருக்கும் 18 வயது மாணவி.
மற்ற இருவரில் ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டையுடன் நெதர்லாந்திலிருந்தும், மற்றவர் வேலை அனுமதிச் சீட்டுடன் பிலிப்பீன்சிலிருந்தும் சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள்.
இதற்கிடையே, பேருந்து பணிமனைகள், பேருந்து நிலையங்கள் உட்பட, பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் நிறைவுக்கு வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து 2 ஆக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த இரு வாரங்களின் தினசரி சராசரி 1 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.