சிங்கப்பூர்- இந்தியா விரிவான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (Ceca) கீழ் இந்திய நாட்டவர்களுக்கு சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதியோ அல்லது குடியுரிமையோ வழங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரிய விரும்பும் இந்திய நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் போன்றவர்களுக்கு தானாகவே வேலை அனுமதியை சிங்கப்பூர் அதிகாரிகள் வழங்க வேண்டும் என்ற தேவையை Ceca கொண்டிருக்கிறது என்பதும் உண்மையில்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியது.
கடந்த 2005ஆம் ஆண்டில் உருவான இந்த ஒப்பந்தத்தின் நற்கூறு பற்றி அண்மைய வாரங்களில் மீண்டும் கேள்விகளுக்கு உட்பட்டதையடுத்து, செய்தி நிறுவனங்களிடம் வழங்கிய அறிக்கையில் அமைச்சு இந்தத் தகவல்களைத் தெரிவித்தது.
Ceca உட்பட சிங்கப்பூரின் எந்தவொரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் வேலை அனுமதிகளைத் (EPs) தானாக முன்வந்து வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
வேலை அனுமதிக்காக (EP) விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்; அனைத்து நிறுவனங்களும் நியாயமான முறையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும்,” என்றது அறிக்கை.
மிகவும் சவாலான பொருளியல் மற்றும் வேலைச் சூழலில், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் போன்ற பணிகளுக்கு வெளிநாட்டினரின் போட்டி குறித்து சிங்கப்பூரர்கள் கவலை கொண்டிருப்பதையும் அறிக்கை சுட்டியது.
ஆனால் Ceca காரணமாகவே இந்தியர்கள் அத்தகைய பணிகளில் அமர்த்தப்படுவதாகக் குறிப்பிடுவது தவறு என்று அறிக்கை தெரிவித்தது. நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து ஊழியர்கள் சிங்கப்பூர் கிளைக்கு மாற்றப்படுவதும் உண்டு என்று அது குறிப்பிட்டது.
இத்தகைய பணிகளில் இருப்போர் சிங்கப்பூரில் எம்பிளாய்மண்ட் பாசில் இருப்பவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே என்றும் அவர்களில் இந்திய நாட்டவர் ஒரு சிறு பங்குதான் என்றும் குறிப்பிட்டது. அத்தகைய பணிகளில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்றும் அறிக்கை தெரிவித்தது.
Ceca ஒப்பந்தத்தின்கீழ், நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து சிங்கப்பூர் கிளைகளுக்கு மாற்றம் பெற்று வருபவர்கள் குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு இங்கு அந்த நிறுவனத்துக்காக பணியாற்ற வேண்டும். அவர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகளுக்கு மட்டுமே இங்கு இருக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ceca ஒப்பந்தம் விவாதத்துக்குள்ளாக்கப்படுவது இது முதல் முறையல்ல. சிங்கப்பூரில் PMET வேலைகளை இந்திய நாட்டவர் எடுத்துக்கொள்வதற்கு இந்த இருதரப்பு ஒப்பந்தம் வழிவகுப்பதாக கடந்த ஆண்டும் இதே போன்ற சர்ச்சைக் கருத்து வெளியானது.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், Cecaவின் அம்சங்கள் திருத்தியமைக்கப்படும் என்று குறிப்பிட்டன.
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியச் சந்தையை அணுக, பல வரித் தடைகளைத் தகர்க்க உதவி இருப்பதாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிச் சேவைகளை வழங்க உதவி இருப்பதாகவும் இந்த ஒப்பந்தத்தால் பலனடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.