லக்கி பிளாசாவுக்கு அருகில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் 64 வயது ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக 3 குற்றச்சாட்டுகளை மலேசியரான சோங் கிம் ஹோ எதிர்நோக்குகிறார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், ஆர்ச்சர்டு ரோடு கடைத்தொகுதியின் பின்னால் உள்ள நட்மெக் ரோட்டில் U-turn செய்து திரும்பியபோது முடுக்குப்பொறியை (accelerator) அழுத்தியதாகக் கூறப்படுகிறது.
அருகில் இருந்த நடைபாதையில் வாகனத்தைச் செலுத்தியதாகவும் லக்கி பிளாசா சேவைச் சாலையின் மீது காரை ஓட்டி, 41 வயதான திருவாட்டி அபிகயில் டானாவோ லெஸ்டெ, 50 வயதான திருவாட்டி அர்லின் பிகார் நியூகஸ் ஆகிய இரு பிலிப்பினோ பணிப்பெண்கள் மீது மோதியதாகவும் கூறப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய அவ்விரு பெண்களும் உயிரிழந்தனர்.
சோங்குக்கு $15,000 பிணை விதிக்கப்பட்டுள்ளது. வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவிப்போருக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.