சிங்கப்பூர் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து, வேலைகளை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபடும்போது அதன் முக்கிய நோக்கம் சிங்கப்பூரர்களின் வாழ்வை மேம்படுத்துவதுதான் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் திறனாளர்களை இங்கு அழைப்பதன் மூலம் அந்த நோக்கம் நிறைவேற உதவி செய்துள்ளது. ஏனெனில், இது சிங்கப்பூரர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், வேலை அனுமதி தொடர்பாக சிங்கப்பூர் தனது கொள்கைகளை மாற்றி அமைத்து வரும் வேளையில், வெளிநாட்டினர் வரவேற்கப்பட மாட்டார்கள் என்ற தவறான சமிக்ஞையை நாம் அனுப்பிவிடக்கூடாது என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிய விவகாரம் கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
ஊழியரணியில் சிங்கப்பூரர்களின் இடத்தைப் பாதுகாக்க அரசாங்கம் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
வெளிநாட்டினரிடம் உள்ளூர்வாசிகள் வேலை வாய்ப்புகளை இழந்ததாகவும் தங்கள் அலுவலகங்களில் வெளிநாட்டினர் தங்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் கூறியதை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இதனால், வேலை அனுமதி வழங்குவது தொடர்பான கொள்கைகள் மிகவும் எளிதாக இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பினர்.
இதன் தொடர்பில் பேசிய பிரதமர் லீ, சிங்கப்பூரர்கள் நியாய உணர்வு கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்.
எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் வைத்திருப்போர் எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளைநோய் தலையெடுத்த பிறகு குறைந்துள்ளது என்பதுடன் வேலை அனுமதி வழங்கும் திட்டங்களும் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.
தொடர்ந்து பேசிய திரு லீ, அரசாங்கம் என்றென்றும் சிங்கப்பூரர்களுக்கு சார்பாகச் செயல்படும் என்று பல்வேறு அமைச்சர்கள் கொடுத்த உறுதியை தாமும் கொடுத்தார்.
“சிங்கப்பூரர்களுக்கு எவ்வித பலனும் இல்லை எனில், வெளிநாட்டினருக்கு வேலைகளை உருவாக்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எதற்காக அரசாங்கம் அவ்வாறு செய்ய வேண்டும்? பொருளியலை வளர்த்து, சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, ஓர் அனைத்துலக அமைப்பின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் இருப்பதன் மூலமும் உலக சந்தையில் பங்களிப்பதன் மூலமும் தனது மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது தெரியும். இந்நிலையில், கொள்கைகள் உள்நோக்கித் திரும்புவது குறித்து அவர் எச்சரித்தார்.
காலப் போக்கில், வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு ஈர்க்க அரசாங்கம் செயல்பட்டதுடன், சிங்கப்பூரில் திறன்படைத்த ஊழியர்கள் இல்லாத நிலையில் வெளிநாட்டுத் திறனாளர்களை அழைத்து வரவும் அனுமதித்தது என்று பிரதமர் லீ கூறினார்.
ஆனால் இந்த நிறுவனங்கள் சிங்கப்பூரர்களையும் வேலைக்குச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குப் போதிய பயிற்சி அளித்து காலப்போக்கில் அவர்களும் உயர்ந்து இந்த வேலைகளை மேற்கொள்ளும் நிலை வரும் அடிப்படையிலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர்.
உற்பத்தி ஆலைகளைக் கட்டுவதன் மூலம் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் முதலில் முதலீடு செய்யத் தொடங்கிய கிளாஸ்கோஸ்மித்கிளைன் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பின்னர் தங்களது வட்டாரத் தலைமையகங்களையும் ஆய்வகங்களையும் இங்கே அமைத்தன என்று பிரதமர் லீ எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டார்.
இதுபோல் நிதிச் சேவைகள், பகுதி மின்கடத்தி உற்பத்தித் துறை, எண்ணெய்-எரிவாயுத்துறை, தகவல் தொழில்நுட்பம் என பல நிறுவனங்கள் இங்கே கால் பதித்து, சிங்கப்பூரர்களை உருவாக்கி, அவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளன என்று அவர் சுட்டினார்.
தற்போதைய கொரோனோ கொள்ளை நோய் பரவல் சூழ்நிலையிலும் சில நிறுவனங்களும் சிங்கப்பூரில் செயல்பட ஆவல் தெரிவித்துள்ளன. வேறுபல நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன.
ஆனால், நிறுவனங்கள் இங்கு வருவதற்கு ஏதுவாக அவர்கள் வரவேற்கப்படுகின்றன என்ற உணர்வு இருக்க வேண்டும். அத்துடன், சில வேலைகளுக்குத் தேவையான திறனாளர்களை இங்கு கொண்டு வர அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று திரு லீ கூறினார்.
வேலை அனுமதி அட்டைகள் குறித்த கொள்கைகளை சிங்கப்பூர் சரிசெய்தாலும், சிங்கப்பூர் இனிமேல் மற்றவர்களை வரவேற்காது என்ற தவறான சமக்ஞையை கொடுக்காமல் இருப்பதில் கவனம் வேண்டும்.
சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்கள் கொள்கைகளால் கிடைக்கும் பொருளியல் ஆதாயங்கள் தெளிவாக உள்ளன என்றார் திரு லீ.