மக்கள் செயல் கட்சி அரசாங்கமே தொடர்ந்து பதவியில் இருக்கும் என்பதால் வாக்காளர்கள் அச்ச மின்றி எதிர்த் தரப்புக்கு வாக்களிக்கலாம் என்று கடந்த தேர்தலில் பிரசாரம் செய்யப்பட்டது.
இதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியன் லூங்கும் எதிர்த் தரப்புத் தலைவர் பிரித்தம் சிங்கும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்படி மற்றவர் முதுகில் ஏறி இலவசமாக சவாரி செய்ய எந்தவொரு கட்சி முயன்றாலும் அத்தகைய தந்திரம் முடிவில் ஒரு நாட்டின் அரசியல் முறையைத் தோல்வி அடையச் செய்துவிடும் என்று பிரதமர் தெரிவித்தார்.
யார் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்வதே தேர்தல் என்று வலியுறுத்திக் கூறிய திரு லீ, மக்கள் நேர்மையாக, மனப்பூர்வமாக, உண்மையிலேயே தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களித்தால் மட்டுமே ஒரு நாட்டின் அரசியல் முறை செயல்பட முடியும் என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் கொள்கைகள் சரியானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியமானது என்பதை விளக்கி நாடாளுமன்றத்தில் திரு லீ உரையாற்றினார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் நடந்தது.
மக்கள் செயல் கட்சி அரசாங்கம் வேண்டும் என்றும் அதேவேளையில் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு குரலும் ஒலிக்க வேண்டும் என்றும் விரும்பும் வாக்காளர்கள் பல சிங்கப்பூரர்களின் கருத்துகளை பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மன்றத்தில் தொகுதியில்லாத உறுப்பினர்கள் முறை மூலம் எதிர்த்தரப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்றார். அத்தகைய உறுப்பினர்கள் மக்களுக்கு மசெக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.
மசெக அரசாங்கம் தவறு செய்கிறது என்று மக்கள் கருதினால் அத்தகைய அரசாங்கத்துக்கு வாக்களிக்கக் கூடாது. ஆனால் சிங்கப்பூரர்கள் தந்திரமான ரீதியில் வாக்களித்தார்களேயானால் ஒரு நாள் அவர்கள் விரும்பாத ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் என்று பிரதமர் எச்சரித்தார்.
பிரதமருக்கும் எதிர்த்தரப்புத் தலைவருக்கும் இடையில் சிங்கப்பூரின் தேசிய சேமிப்பு தொடர்பிலும் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.
அந்தச் சேமிப்பில் இருக்கும் அசல் தொகையைத் தொடாமல் அதனுடைய வளர்ச்சி விகிதத்தை எந்த அளவுக்கு மெதுவடையச்செய்ய முடியும் என்பதை பரிசோதிப்பதே பாட்டாளிக் கட்சியின் எண்ணம் என்று திரு பிரித்தம் சிங் கூறினார்.
புதிய நாடாளுமன்றத்தைத் தொடங்கிவைத்து அதிபர் ஆற்றிய உரை மீதான விவாதத்தின்போது இந்தப் பிரச்சினையை எழுப்பிய பிரதமர், பாட்டாளிக் கட்சி சிங்கப்பூரின் சேமிப்பின் அளவு பற்றி கேள்வி எழுப்பி இருந்தது எப்படி என்பதைக் குறிப்பிட்டு அதை குறை கூறினார்.
வரவுசெலவுத் திட்டத்தையும் வரித் திட்டங்களையும் ஆதரிப்பதற்கு முன் சேமிப்பில் இருக்கும் தொகை எவ்வளவு என்பதை தெரியப்படுத்துங்கள் என்று பாட்டாளிக் கட்சி கேட்டிருந்தது.
அதாவது ஏற்கெனவே எனக்கு வங்கியில் பணம் இருக்கிறது. அதில் எந்த அளவுக்கு நான் தொட முடியும் என்றுதான் அந்தக் கட்சி கேட்கிறது.
இந்தப் போக்கு அடிப்படை ரீதியில் தவறான அணுகுமுறை என்று திரு லீ குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த திரு சிங், சிங்கப்பூரர்களின் நல்வாழ்வை இன்னும் சிறந்த முறையில் பரிசீலிப்பதற்கான மாற்று ஏற்பாடாக அந்தப் புள்ளிவிவரங்களைப் பாட்டாளிக் கட்சி கேட்பதாக குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த திரு லீ, காப்பு நிதியைச் சிரமமான காலத்தில் பயன்படுத்துவதற்கான நிதியாகக் கருத வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் பேரிலேயே தான் வாதிடுவதாக தான் அளித்த விளக்கத்தில் தெரிவித்தார்.