சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளல்லாத, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இம்மாதம் 17ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்கு கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொள்ளப்பட்ட, ‘பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்’ சோதனை முடிவுகளில் கொவிட்-19 இல்லை என்ற சான்றிதழை அவர்கள் சிங்கப்பூரில் காட்ட வேண்டும்.
சிங்கப்பூருக்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பயணிகளுக்கு இந்த புதிய, கடுமையான எல்லைக் கட்டுப்பாடு பொருந்தும். 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் வளாகங்களில் தங்குவது, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனை போன்ற ஏற்கெனவே நடப்பில் இருக்கும் நடைமுறைகளுடன் இந்தப் புதிய கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் கொவிட்-19 சம்பவங்கள் பெருகி வருவதாலும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களிடையே கொவிட்-19 எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த ஒரு வயது குழந்தைக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியா இன்று 89,706 புதிய கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்தது; அங்கு கொவிட்-19 மொத்த எண்ணிக்கை சுமார் 4.3 மில்லியனை எட்டியுள்ளது. உலக அளவில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் கொவிட்-19 எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்து உள்ளூர் சமூகத்தில் கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், தேவையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து சரிசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வந்ததும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்குவது, கொவிட்-19 பரிசோதனை போன்றவற்றுக்கான செலவுகளுக்கும் பயணிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்தது.