கிருமித்தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின்றன. இதற்கு தீவிர கொவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகளே காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது. தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் முயற்சிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அமைச்சு கூறியது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று இங்குள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் சராசரியாக ஒவ்வொரு நாளும் 45 ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் நேற்று குறிப்பிட்டது.
மீண்டுவிட்டதாக கூறப்பட்ட தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு இதுவரை கிருமி தொற்றாமல் இருந்தால், அவர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்களை 14 நாட்களுக்கு ஒரு முறை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை நடப்புக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைக் கண்டறிய முடிந்ததாக கூறப்பட்டது.
மேலும் ஏதேனும் புதிய கிருமித்தொற்று சம்பவம் கண்டறியப்பட்டால் உடனே தொடர்புகளின் தடங்களை அறியும் பணிகள் மும்முரமாக்கப்பட்டு கொவிட்-19 கிருமிக்கான சோதனைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிதாக பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களில், இரண்டு விழுக்காட்டினருக்கு ஏற்கெனவே தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.
தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைக் கண்டறிந்து தொற்றை விரைவாக கட்டுப்படுத்த ‘பல அடுக்கு உத்திமுறை’யைப் பயன்படுத்துவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்த உத்திமுறை கிருமித்தொற்று குழுமங்கள் உருவாவதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தங்கும் விடுதியின் வெவ்வேறு கட்டடங்களில், வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில் வசிக்கும் ஊழியர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் அதிகம் இல்லாமல் தங்கும் விடுதியின் அதிகாரி கவனித்திட வேண்டும்.
அத்துடன் ஊழியர்களின் உடல்நிலையைக் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இதற்கிடையே ஊழியர்களிடையே கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகாமல் முதலாளிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு நினைவுறுத்தியது.