தேசிய சுற்றுப்புற வாரிய சுற்றுச்சூழல் சுகாதாரக் கழகத்தின் கொசு உற்பத்தி வளாகத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று பார்வையிட்டார்.
நாம் கொவிட்-19க்கு எதிரான போரில் களமிறங்கியிருந்தாலும், மற்ற அச்சுறுத்தல்களையும் கவனிக்காமல் இருக்க முடியாது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் லீ, கொசுக்களுக்கு எதிராக கொசுக்களையே பயன்படுத்தி, டெங்கிக்கு எதிரான போராட்டத்தில் முயற்சியை இரு மடங்காக்கி இருப்பதாகக் கூறினார்.
‘வொல்பாச்சியா’ திட்டத்தின்கீழ், டெங்கிக்கு காரணமான ஏடிஸ் பெண் கொசுக்கள் இருக்கும் இடங்களில், ‘வொல்பாச்சியா’ பாக்டீரியாவைக் கொண்ட ஆண் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களை விட்டால், ஏடிஸ் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிக்காது. எனவே டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் பெண் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற விவரத்தையும் பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதிக அளவிலான வொல்பாச்சியா ஏடிஸ் கொசுக்களை உருவாக்குவதற்கான திறன்மிகு வழிகளைப் பற்றியும் சுற்றுச்சூழல் சுகாதரக் கழகத்தின் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டதாக திரு லீ பதிவிட்டிருந்தார்.
டெங்கி பாதிப்பைக் குறைக்க, கொசுப் பெருக்கத்தைத் துடைத்தொழிப்பதற்கான நடைமுறைகளை அனைவரும் பின்பற்றி நமது பங்கை ஆற்ற வேண்டும் என்பதையும் தம் பதிவில் பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.