உலக நாடுகளுக்கான அறிவார்ந்த நகர் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்துள்ளது.
குறியீட்டில் முன்னிலை பெற்றிருக்கும் நகரங்கள் கொவிட்-19 சூழலைச் சிறப்பாகக் கையாண்டு உள்ளதாக இந்தப் பட்டியலின் பின்னணியில் செயலாற்றும் குழு தெரிவித்திருக்கிறது. மொத்தம் 109 நகரங்கள் அவற்றின் செயல்பாட்டுக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டன. கொரோனா கிருமியைக் கையாள நகரங்கள் எவ்வாறு தொழில்நுட்பத்தை நீண்ட காலத்துப் பயன்படுத்தின என்பது கருத்தில் கொள்ளப்பட்டது.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்று சுவிஸ் நிர்வாகக் கல்விக் கழகம் குறிப்பிட்டது.
கடந்த 12 மாதங்களாகவே சிங்கப்பூரின் செயல்பாடுகளைத் தாங்கள் கவனித்து வந்துள்ளதாகவும் எதிர்பாராத சவாலை சிங்கப்பூர் வெற்றிகரமாகக் கையாண்ட விதமும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் உலக போட்டித்தன்மை நிலைய இயக்குநர் பேராசிரியர் ஆர்டுரோ பிரிஸ் கூறியுள்ளார்.
‘‘ சிங்கப்பூர் நகரம் துரிதமாக, திட்டவட்டமாக செயல்பட்டது. அதனிடம் ஒரு தெளிவான திட்டம் இருந்தது. ஆனால் அதே சமயம் சற்று நீக்குப்போக்கையும் கையாண்டது. அரசு எடுத்த முடிவுகள் குடிமக்களுக்கு தெரிவிக்கப்பட்டன, பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உதவிகளும் வழங்கப்பட்டன,’’ என்று பேராசிரியர் பிரிஸ் தெரிவித்தார்.
மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் தொற்றை சிறப்பாகக் கையாண்டுள்ளன என்றும் அறிவார்ந்த நகரங்கள் இதற்குத் தீர்வு இல்லை என்றாலும் தொழில்நுட்பம் உதவுகிறது என்றும் அவர் சொன்னார்.
அறிவார்ந்த நகர் குறியீட்டில் பொருளியல் நிலை, தொழில்நுட்பத் தரவுகளின் அடிப்படையில் நகரங்கள் பட்டியலிடப்பட்டன.