கொவிட்-19 பாதிப்பால் வேலைச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்ததாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் சேவைத் துறையில் பணியாற்றியவர்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அங்கு சேவைத் துறையில் பணியாற்றிய 11,123 மலேசியர்கள் வேலை இழந்தனர். உற்பத்தித் துறையில் 3,604 பேரும் கட்டுமானப் பணியாளர்கள் 939 பேரும் வேலையிழந்ததாகத் தெரியவந்துள்ளது,” என்றார் திரு சரவணன்.
கொவிட்-19 சூழலில் வேலை இழந்தவர்கள் பற்றிய விவரங்களை செனட்டர் லியூ சின் டோங் கோரியதற்கு பதிலளித்த திரு சரவணன் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
ஆனால், மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட மார்ச் 18ஆம் தேதிக்குப் பிறகு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பாதவர்களின் விவரம் இந்தத் தரவுகளில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.