சிங்கப்பூரில் உள்ளூர் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து குறைவாக இருப்பதால், அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களை ஆதரிப்பது, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்ப வழிவகை செய்வது போன்ற வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்கும் பொருட்டு, தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளில் சிலவற்றை அமைச்சுகள் நிலை பணிக்குழு தளர்த்துகிறது.
பாதுகாப்பான வாழ்க்கை, வேலைச் சூழலை அனைவருக்கும் வழங்கும் நோக்கில், கிருமி தொற்றியவர்களை கூடிய விரைவில் கண்டுபிடிப்பதை ஆதரிக்கும் நடவடிக்கைகளையும் பணிக்குழு மேம்படுத்துகிறது.
வட்டார, அனைத்துலக அளவிலான பொறுப்புகளை ஏற்று, பணி நிமித்தம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு புதிய வர்த்தக பயண அனுமதி அட்டையை வழங்கும் முன்னோடித் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
அத்தகையோர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, அனுமதிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பயண நிரலை மட்டுமே பின்பற்ற வேண்டும். அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு, மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
இந்த முன்னோடித் திட்டத்தின் தொடர்பில் பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில்,
தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே அனுமதி வழங்கப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் கூடுதலானோருக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உண்டு என்று பணிக்குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.