சிங்கப்பூரில் வெளிநாட்டினர் எண்ணிக்கை 2.1 விழுக்காடு குறைந்து 1.64 மில்லியன் ஆகியுள்ளது.
இதன் விளைவாக கடந்த ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரின் மக்கள்தொகை 0.3 விழுக்காடு சரிந்து 5.69 மில்லியன் ஆகியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான மக்கள்தொகை 5.7 மில்லியன்.
கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரின் மக்கள்தொகை குறைந்திருப்பது இதுவே முதல்முறை. சேவைத் துறையில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பது குறைந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
கொரோனா நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள முடக்கநிலை, பயணக் கட்டுப்பாடுகளால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெளிநாடுகளில் வசித்து வந்த பல சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும்
சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 217,200ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை இவ்வாண்டு 203,500ஆகக் குறைந்தது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களில் அனைத்து வயதினரின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 20 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை அதிக அளவில் சரிந்ததாக அரசாங்கத்தின் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கை குறிப்பிட்டது.
2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மெதுவாக வளர்ச்சி கண்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் 0.6 விழுக்காடு அதிகரித்து 3.52 மில்லியனானது. நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை அதிக மாற்றமின்றி ஏறத்தாழ அரை மில்லியனாக இருக்கிறது.
2009ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் குடிநுழைவுக் கட்டமைப்பு விதிமுறை கடுமையாக்கப்பட்டதை அடுத்து ஒவ்வோர் ஆண்டிலும் ஏறத்தாழ 30,000 நிரந்தரவாசிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிக்கை தெரிவித்தது.
“சிங்கப்பூரின் குடிநுழைவுக் கட்டமைப்பு விதிமுறை 2009ல் கடுமையாக்கப்பட்டதால் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை சீரான நிலையில் உள்ளது. இதிலிருந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற தகுதியுடையோரைத் தேர்வு செய்யலாம். பெரும்பாலான நிரந்தரவாசிகள் 25 வயதுக்கும் 59 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
“நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒற்றுமையான சமுதாயத்துடன் சிங்கப்பூரர்களுக்கு நல்லதொரு இல்லமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழும்,” என்று அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆண்டில் 22,714 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது. 32,915 பேர் நிரந்தரவாசிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
2012ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை சீராக உள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களில் 1,599 பேர் வெளிநாடுகளில் சிங்கப்பூர் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் ஆவர். கடந்த ஐந்து ஆண்டுகளின் மக்கள்தொகை வளர்ச்சி அதற்கு முந்திய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மெதுவடைந்துள்ளது.
அதிகரித்து வரும் ஆயுட்காலம், குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதம் ஆகியவற்றினால் 65 வயதுக்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் 65 வயதுக்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 23.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பேபி பூமர்ஸ்’ தலைமுறையினர் என்று அழைக்கப்படும் 1946ஆம் ஆண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை பிறந்தோரில் பலருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது.
65 வயதுக்கு மேல் ஆகிவிட்ட ‘பேபி பூமர்ஸ்’ தலைமுறையினரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் 10.1 விழுக்காடாக இருந்தது.
இந்த எண்ணிக்கை இவ்வாண்டு 16.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை மூப்படைந்து வருவதால் சிங்கப்பூரர்களின் சராசரி வயது கடந்த ஓராண்டில் 42 வயதிலிருந்து 42.2 வயதாக உயர்ந்துள்ளது.