வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் ஒன்று சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் காண உள்ளது.
வேலை தொடர்பற்ற மரணங்கள், ஒட்டுமொத்த மற்றும் நிரந்தர உடற்குறை, கடுமையான நோய் போன்றவற்றை இந்தக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும், ‘என்டியுசி இன்கம்’ நிறுவனத்தின் இந்தக் காப்புறுத் திட்டத்துக்கான தவணைக் கட்டணமாக, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது நிறுவனம் ஆண்டுக்கு $9 செலுத்த வேண்டும்.
என்டியுசி, லீப்201 எனும் அறக்கொடை அமைப்பு ஆகியவை இன்று வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்தன.
செல்லத்தக்க வேலை அனுமதி அல்லது ‘எஸ் பாஸ்’ வைத்திருக்கும் 60 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்குத் தகுதி பெறுவர்.
மேலும், இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் முதல் 50,000 ஊழியர்களுக்கு ஈராண்டுகளுக்கான தவணைக் கட்டணத்தில் விலைக்கழிவு கிடைக்கும். அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு $3 மட்டுமே செலுத்தினால் போதும்.
‘லீப்201’, என்டியுசியின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியவை $600,000 நிதி திரட்டியதையடுத்து இது சாத்தியமாகியுள்ளது.
வேலை தொடர்பில்லாத மரணம், ஒட்டுமொத்த அல்லது நிரந்தர உடகுறை ஏற்படும் பட்சத்தில் $10,000 தொகையை காப்புறுதி நிறுவனம் அந்த வெளிநாட்டு ஊழியருக்கு வழங்கும்.
கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் ஊழியர், அவை ஒவ்வொன்றுக்கும் தலா $10,000 வரை பெறுவார். கடுமையான புற்றுநோய், பக்கவாதம், நிரந்தர நரம்பியல் குறைபாடு, குறிப்பிட்ட அளவுக்கு கடுமையான இதய நோய் உட்பட 37 கடுமையான நோய்களை இது உள்ளடக்கும்.
“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடையே ஏற்படும் மரணங்களுக்கு எதிர்பாராத மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், நீரிழிவு போன்றவை காரணமாக இருந்து வந்துள்ளன,” என்று வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவ ர் இயோ குவாட் குவாங் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் கடுமையான காயங்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும்போதோ, உயிரிழக்கும்போதோ, சொந்த ஊரில் அவர்களது குடும்பத்தார் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே சம்பாதிக்கும் நிலையும் உள்ளது,” என்று ‘என்டியுசி இன்கம்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ இயோ குறிப்பிட்டார்.
இந்தக் காப்புறுதித் திட்டத்தை ஊழியர்களுக்காக வாங்கும்படி நிறுவனங்களையும் ஊழியர் தங்கும் விடுதி நடத்துநர்களையும் ‘லீப்201’ அமைப்பின் தலைவர் மைக்கல் லியன் வலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்தில் ஆரம்பத்திலேயே ஊழியர்களைச் சேர்க்க விரும்பும் நிறுவன குழுக்களும் தொழில்துறைப் பங்காளிகளும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.