சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு கா. சண்முகத்துக்கு எதிராக, ‘லாயர்ஸ் ஃபார் லிபர்டி’ எனும் மலேசிய மனித உரிமை அமைப்பு தொடுத்த வழக்கை மலேசிய உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த அரசு சாரா அமைப்பு, சிங்கப்பூர் உள்துறை அமைச்சுக்கு எதிராக, அதன் இணையத்தளக் கட்டுரையில் உண்மைக்கு மாறான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டிருந்தன.
அதற்காக அந்த அமைப்பு, தனது கட்டுரையின் மேற்பகுதியில் திருத்தக் குறிப்பை இணைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு அதற்கு ‘பொஃப்மா’ எனும் இணையவழிப் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்படி உத்தரவு ஒன்றை இவ்வாண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று பிறப்பித்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘லாயர்ஸ் ஃபார் லிபர்டி’ அமைப்பு, சிங்கப்பூர் உள்துறை அமைச்சுக்கு எதிராக மலேசிய உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
‘லாயர்ஸ் ஃபார் லிபர்டி’ அமைப்பின் கட்டுரையில், சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் மரண தண்டனை கொடூரமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தது.
திரு சண்முகத்துக்கு எதிரான நீதிமன்ற ஆவணங்களையும் ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்காத காரணத்தாலும் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிக்காத காரணத்தாலும் மலேசிய உயர்நீதிமன்றம் அந்த அமைப்பின் வழக்கை கடந்த மாதம் 21ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ‘லாயர்ஸ் ஃபார் லிபர்டி’ அமைப்பு தனது இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள், கைதி ஒருவரைத் தூக்கிலிடும்போது தூக்குக்குப் பயன்படுத்தப்படும் கயிறு அறுந்துவிட்டால், கைதியின் கழுத்தின் பின்புறத்தில் பலமாக உதைத்து அவரது கழுத்துப் பகுதியை உடைக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது.
பின்னர் பொஃப்மா அலுவலகம், கட்டுரையை வெளியிட்ட அந்த அரசு சார்பற்ற அமைப்புக்கும் அந்தக் கட்டுரையை தங்கள் இணையத்தளத்தில் மறுபதிவேற்றம் செய்த சிங்கப்பூர் மனித உரிமை ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான், தி ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம், யாகூ சிங்கப்பூர் ஆகியவற்றுக்கும் திருத்தக் குறிப்பு வெளியிடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ் முரசின் நாளைய (அக்டோபர் 2) அச்சுப் பதிப்பை நாடுங்கள்!