வேலை ஆதரவு திட்டத்தை ஜூலை மாதம் ஏறக்குறைய 2,200 முதலாளிகள் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆகையால் அவர்களின் கோரிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
முதலாளிகளில் 444 பேருக்கு ஏறக்குறைய $10 மில்லியன் தொகை மறுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் இன்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ள முதலாளிகள் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவான பத்திரங்களைத் தாக்கல் செய்யும் வரை அவர்களுக்கான பணப் பட்டுவாடா நிறுத்தி வைக்கப்படும் என்று இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுபரிசீலனையின்போது பிரச்சினைகள் ஏதேனும் தலைதூக்கினால் அத்தகைய முதலாளிகளுக்குத் தொகை மறுக்கப்படும் அல்லது சரி செய்யப்படும். கடுமையான விவகாரங்கள் ஏதேனும் தெரியவந்தால் போலிசிடம் தெரிவிக்கப்படும்.
வேலை ஆதரவு திட்டம் மூலம் நியாயமாகவும் சரியாகவும் பணம் கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த ஆணையம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போதைய நடவடிக்கை இடம்பெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆணையத்துக்குச் செப்டம்பர் மாத முடிவு வாக்கில் 1,400க்கும் அதிக முதலாளிகளிடம் இருந்து பல பத்திரங்களும் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பான மறுபரிசீலனைகளை ஆணையம் முடித்துக் கொண்டு உள்ளது.
ஏறக்குறைய 50 முதலாளிகள் கட்டாய மசே நிதி சந்தா தொடர்பில் தவறான தகவல்களை வேண்டுமென்றே தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தொகை சரிசெய்யப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
இது தொடர்பான விரிவான செய்திக்கு தமிழ் முரசின் நாளைய (அக்டோபர் 3) அச்சுப் பிரதியை நாடுங்கள்!