எதிர்காலத்தில் தொற்றுநோய்ப் பரவல் அபாயத்தைத் தவிர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய விடுதிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர்.
கட்டப்படும் எட்டு ‘விரைந்து கட்டப்படும் விடுதி’களில் (QBDs) சுவா சூ காங் குரோவ், கிராஞ்சி வே ஆகிய இடங்களில் உள்ள இரண்டில் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து ஊழியர்கள் குடியேறத் தொடங்கினர்.
சுமார் 3 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கக்கூடிய வகையில் கட்டப்படும் அந்த விடுதிகளில் மொத்தம் சுமார் 25,000 ஊழியர்கள் வரை வசிக்கலாம்.
ஊழியர் தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் நெருக்கமாக வசிப்பதால், இந்தப் புதிய விடுதிகள் அமைக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதத்தில், கொவிட்-19ஐ கையாளும் அமைச்சுகள் நிலை பணிக்குழு அறிவித்திருந்தது.
புதிய நிரந்தர தங்கும் விடுதிகளை அமைப்பதற்கான விவரக் குறிப்பீடுகளை முடிவு செய்வதற்கு முன்பு, தரம் மேம்படுத்தப்பட்ட இந்த தற்காலிக விடுதிகள் பரிசோதனை முன்னோட்டமாக அமைகின்றன.
சிங்கப்பூரில் பதிவான சுமார் 58,000 கொரோனா தொற்று சம்பவங்களில் 94 விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பானது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் விடுதிகளில் கொவிட்-19 தாக்கம் உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போது விடுதிகளில் 10க்கும் குறைவான சம்பவங்களே தினசரி பதிவாகி வருகின்றன.
இந்த புதிய தற்காலிக விடுதிகளில் ஒரு அறையில் அதிகபட்சம் 10 படுக்கைகள் மட்டுமே இருக்கும். அவற்றுக்கிடையே 1 மீட்டர் தூர இடைவெளி உறுதி செய்யப்படும்.
இதற்கு முன்பு, ஒரு அறையில் இருக்க வேண்டிய படுக்கைகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி இருந்தது. 12 முதல் 16 பேர் வரை ஒரு அறையில் இருப்பது பொதுவான நடைமுறையாக இருந்தது.
கழிவறைகள், குளியலறைகள், உடல்நலக் குறைவான நேரத்தில் ஓய்வெடுக்கும் இடங்கள் போன்ற பொதுவான வசதிகளை குறைந்த எண்ணிக்கையிலானோர் பகிர்ந்துகொள்வர்.
சுமார் 4 மாதங்களில் கட்டப்படும் புதிய தற்காலிக விடுதிகள் கிராஞ்சி வே, துவாஸ் கிரசென்ட், துவாஸ் சவுத் புல்லிவார்ட், ஜூரோங்கில் இருக்கும் ஜாலான் டுக்காங், அட்மிரல்டி ஸ்திரீட், சுவா சூ காங் குரோவ், சுவா சூ காங் வே, தெம்பனிஸ் அவென்யூ 2 ஆகிய இடங்களில் அமைக்கப்படுகின்றன.
எட்டில் நான்கு விடுதிகளை வெஸ்ட்லைட் அக்காமடேஷன் நிறுவனம் நடத்தும். சுமார் 6,400 படுக்கைகளை மூன்றாண்டுகளுக்கு நிர்வகிக்க உள்ள அந்த நிறுவனம் $1.09 மில்லியன் மாதாந்திர வாடகையாக ஜேடிசி நிறுவனத்துக்கு செலுத்தும்.
வேறு இரண்டு விடுதிகளை தனியார் நிறுவனங்கள் நடத்தும்.
கிராஞ்சி வேயில் அமைந்திருக்கும் விடுதியில் சுமார் 1,300 படுக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த விடுதியில் உள்ள படுக்கைகளுக்கான வாடகையை வெஸ்ட்லைட் அக்காமடேஷன் நிறுவனம் நிர்ணயிக்கும். அந்தக் கட்டணம் நியாயமானதாக இருப்பதுடன் சந்தை மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
தற்போதைய நிலவரப்படி, ஊழியர்கள் வேலைக்காக மட்டுமே விடுதிகளிலிருந்து செல்ல முடியும். அவர்கள் சென்று வர போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.
பணம் செலுத்தும் சேவைகள், மினிமார்ட், சவரக் கடை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளும் அங்கு உள்ளன.