சிங்கப்பூர்: இரும்பு உத்தரம் விழுந்து நசுக்கியதில் இந்திய ஊழியர் மரணம்

1 mins read
652e172d-1ba8-4f11-9add-53824ab69026
படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

இரும்பு உத்தரங்களை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ஊழியர் மீது, இரும்பு உத்தரம் ஒன்று விழுந்து நசுக்கியதில் அவர் உயிரிழந்தார்.

39 வயதான இந்திய ஊழியர் எண் 40 துவாஸ் வெஸ்ட் ரோட்டில் இருக்கும் ஹாய் லெக் எஞ்சினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

லாரியில் இரும்பு உத்திரங்களை ஏற்றி, அவற்றை ஒன்றோடு ஒன்று பிணைத்துக்கொண்டிருக்கும்போது அவற்றில் ஓர் உத்தரம், அந்தக் கட்டிலிருந்து நழுவி, அந்த ஊழியர் மீது விழுந்து அவரை நசுக்கியது.

இந்தத் தகவலை மனிதவள அமைச்சு இன்று (அக்டோபர் 13) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது தெரிவித்தது.

சம்பவ இடத்திலேயே ஊழியர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட போலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்தப் பணியிடத்தில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் விநியோகப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி ஹாய் லெக் நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் 16 வேலையிட மரணங்கள் பதிவானதாக மனிதவள அமைச்சு, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் ஆகியவை கடந்த மாதம் தெரிவித்திருந்தன.

குறிப்புச் சொற்கள்