கொவிட்-19 நோயாளிகளை ‘மோனோகுளோனல் ஆன்டிபாடி’ பரிசோதனைக்கு பதிவு செய்யும் நடைமுறையை சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையம் (NCID) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பரிசோதனைக்கான மருந்தைத் தயாரித்த அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதன் பரிசோதனையை நிறுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளை அடுத்து, இந்த மருந்தைப் பரிசோதிக்கும் மூன்றாவது நாடு சிங்கப்பூர். இங்கு மூன்றாவது கட்ட ‘மோனோகுளோனல் ஆன்டிபாடி’ பரிசோதனைக்குட்படுத்தப்படும் முதல் மருந்து இது.
இந்தப் பரிசோதனைக்கு நோயாளிகளை அக்டோபர் 6ஆம் தேதியில் பதிவு செய்ய இருப்பதாக NCID அறிவித்திருந்தது. அதற்கு ஒரு வாரம் கழித்து, அதாவது, இம்மாதம் 13ஆம் தேதி, எலி லில்லி எனும் அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் ‘ஆக்டிவ்-3’ எனும் கடைசி கட்ட பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டது.
ஆனால், பாதுகாப்பு குறித்த அக்கறை என்ன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற விவரங்களை அந்நிறுவனம் வழங்கவில்லை.
“ஆக்டிவ்-3 பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, புதிய நோயாளிகளை இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்துவது நிறுத்தி வைக்கப்படுகிறது,” என NCID ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
இந்தப் பரிசோதனைக்கு ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை இது பாதிக்காது.
இதுவரை சிங்கப்பூரில் இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற ஒரு நோயாளிக்கு, அந்த மருந்தின் தொடர்பிலான கடுமையான பக்க விளைவுகள் ஏதுமில்லை என்று NCID குறிப்பிட்டது.
இந்த மருந்தின் பரிசோதனையைத் தொடர்வது பாதுகாப்பானதா என்பது குறித்து பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் இன்னும் சில வாரங்களில் தெரிவிக்கும் என்றது நிலையம்.
“பரிசோதனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து தரவுகளை மறு ஆய்வு செய்வது வழக்கத்துக்கு மாறானதல்ல. நோயாளியின் பாதுகாப்பை அணுக்கமாக கண்காணிப்பது, புதிய சிகிச்சை முறைகளை உருவாக்குவதன் முக்கிய அங்கம்,” என்றும் நிலையம் குறிப்பிட்டது.
சுமார் 100 உள்ளூர் நோயாளிகளை இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்த இருப்பதாக முன்பு நிலையம் குறிப்பிட்டிருந்தது.