அதிகமானோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பங்கேற்பாளர்கள் 'ஆன்டிஜென் ரேப்பிட் டெஸ்ட்’ எனப்படும் கொவிட்-19க்கான துரித பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முப்பது நிமிடங்களுக்குள் வெளிவரும் சோதனை முடிவுகளில் கொவிட்-19 கிருமித்தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டால்தான் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். சிங்கப்பூரில் பாதுகாப்பாக அதிக நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவும் புதிய முன்னோட்டத் திட்டமாக இது அறிவிக்கப்பட்டது.
இத்துரித பரிசோதனைகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திலோ வேறு இடத்தில் அமைந்திருக்கும் பரிசோதனை வளாகத்திலோ நடத்தப்படலாம் என்று நேற்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
வேறு இடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டால் பரிசோதனை முடிவில் தங்களுக்கு கொவிட்-19 இல்லாததைக் குறிக்கும் சான்றிதழைப் பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நுழையும் முன்பு காட்டவேண்டும். அந்தச் சான்றிதழ் 24 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நிகழ்ச்சி முடியும்வரையில் அந்த 24 மணி நேர காலக்கெடு உள்ளடங்கவேண்டும்.
பல நாட்கள் நீடிக்கும் நிகழ்ச்சிக்குச் செல்வோர் தினந்தோறும் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். 24 மணி நேரத்தில் பல நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் ஒருமுறை பரிசோதனையை மேற்கொண்டால் போதும்.
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தவர்கள் 180 நாட்களைத் தாண்டிவிட்ட பட்சத்தில் அவர்கள் உடல்நலத்துடன் இருந்தால் அவர்கள் இந்த விரைவுப் பரிசோதனையை மேற்கொள்ள தேவையில்லை.
மருத்துவரீதியாக கிடைத்துள்ள சான்றுகளின்படி அவர்களுக்கு வேறொரு தொற்று ஏற்படுவதற்கான எதிர்ப்பு சக்தி உடலில் உண்டு என்று சுகாதார அமைச்சு கூறியது.
முன்னோட்டத் திட்டத்தின்கீழ் இந்த ‘அன்டிஜன் ரேபிட் டெஸ்ட்’ பரிசோதனைகள் பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இந்த விரைவுப் பரிசோதனையில் கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாகத் தெரியவந்தால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு இலவசமாக வழங்கப்படும் ‘போலிமெரேஸ் செயின் ரியேக்ஷன்’ எனும் பிசிஆர் கொவிட்-19 கிருமித்தொற்றை உறுதிசெய்யும் பரிசோதனைக்கும் செல்லவேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று முடிவுகள் வரும்வரையில் தனிமைப்படுத்திக்கொண்ட இடத்தைவிட்டு வெளியேறக்கூடாது.
இவ்வாண்டு டிசம்பர் வரையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை அரசாங்கம் சுட்டிக்காட்டும். வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருமண வரவேற்புகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் முதலியவை அவற்றில் அடங்கும்.
நிகழ்ச்சிகளுக்கு முன்னர் நடத்தப்படும் இந்த பரிசோதனைகளின் முன்னோட்டத் திட்டம் மூலம் இந்தச் செயல்பாட்டு வழிமுறைகளை சுகாதார அமைச்சு ஆராய உதவும். அதன்மூலம் சிறப்பான திட்டத்தைக் கண்டறிந்து அதிகளவில் செயல்படுத்தினால் விரைவில் கூடுதலான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டது.
தற்போது தேசிய அளவிலான ‘ஸ்வாப்’ பரிசோதனைகள் தலைசிறந்த முறை என்று கூறப்படும் பிசிஆர் பரிசோதனைகளைக்கொண்டு நடத்தப்படுகிறது. மிகவும் துல்லியமான முடிவுகளை இந்தச் சோதனையின் மூலம் பெறலாம்.
ஆனால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழித்தே இந்தச் சோதனையின் முடிவுகள் தெரியவரும். விலையுயர்ந்த பரிசோதனையாகவும் பயிற்சி பெற்றவர்களும் நிபுணத்துவம் வாய்ந்த தளவாடங்களும் இதற்குத் தேவை.
எனினும் ‘அன்டிஜன் ரேபிட் டெஸ்ட்’ விரைவுப் பரிசோதனைகளுக்குக் குறைவாகவே செலவாகும். மேலும் முடிவுகள் சீக்கிரம் கிடைத்துவிடும். முடிவுகளின் துல்லியம் ஏறக்குறைய சரியாக இருக்கும் என்றும் அமைச்சு கூறியது.
இரவுநேர வர்த்தகங்களுக்கு உதவ முன்னோட்டத் திட்டங்கள்
இரவுநேர வர்த்தகங்கள் மீண்டும் பாதுகாப்புடன் இயங்க உதவ கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னோட்டத் திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கொவிட்-19 கிருமிக்கு எதிராகச் செயல்படும் அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் நேற்று இது குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த முன்னோட்டத் திட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படலாம் என்று இரவுநேர வர்த்தகத் துறையினருடன் கலந்தாலோசிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
2021ல் கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு வாய்ப்புண்டு
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக மக்கள் தொகையில் வெவ்வேறு பிரிவுகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை சிங்கப்பூர் அடுத்த ஆண்டு முதல் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளவர்கள், சுகாதார வல்லுநர்கள், முன்னிலை ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசிக்கு முன்னுரிமை பெறலாம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவை இயக்குநர் கென்னத் மாக் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.