பாதுகாப்பான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்துதல், விடுதிகளில் கொவிட்-19 தொற்றுப் பரவல் விகிதத்தைக் குறைத்தல் போன்ற நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய திட்டத்தின் அங்கமாக, பெரிய விடுதிகள் வாரத்துக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்யப்படும்.
விடுதிகளில் எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், தீவு முழுவதும் இருக்கும் அனைத்து விடுதிகளுக்கும் ‘ஐபிசி’ (IPC) எனப்படும் புதிய கிருமிப் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று இன்று (அக்டோபர் 21) மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (Ace) குழு, சுகாதார அமைச்சு ஆகியவை உருவாக்கிய இந்தத் திட்டம் விடுதி நடத்துநர்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள், மனிதவள அமைச்சின் FAST குழுவினர் ஆகியோரைக் குறிவைக்கிறது.
500க்கும் அதிகமானோர் வசிக்கும் விடுதிகள் வாரத்துக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்யப்படும்; மற்ற விடுதிகள் வழக்கமான பார்வையிடல்களின்போது தணிக்கை செய்யப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்தத் திட்டத்தின் இறுதி படியான தணிக்கையானது, சுய பரிசோதனை, திட்டத்துக்கு முந்தைய கேள்வி பதில்கள் ஆகியவற்றுடன் தொடங்கும். விடுதி நடத்துநர்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் போன்றவர்களின் ‘ஐபிசி’ தொடர்பான அடிப்படைப் புரிதலைப் பரிசோதிக்கும் விதத்தில் வினாக்கள் இருக்கும்.
அதன் பிறகு, காணொளிகள், தகவல் படங்கள், பயிற்சிக்குப் பிந்திய கேள்வி-பதில்கள் ஆகியவற்றுடன் இணையம் வழி பயிற்சி வழங்கப்படும். வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது உடல் வெப்பநிலை, சுகாதார நிலவரம் பற்றி தினமும் பதிவிடும் FWMOMCare செயலியில் பயிற்சி தொடர்பான தகவல்கள் இருக்கும்.
பயிற்சிக்கு முந்தைய கேள்வி-பதில்கள் விடுதி நடத்துநர்கள், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட ஐந்து வாரங்களுக்குப் பிறகு தணிக்கை நடவடிக்கைகள் தொடங்கும் என Ace குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் லாம் மெங் சோன் குறிப்பிட்டார்.
பயிற்சிக்கான தகவல்கள் ஆங்கிலம், தமிழ், பெங்காலி, சீன மொழி ஆகியவற்றில் இருப்பதால் சுமார் 90% ஊழியர்கள் அவற்றை எளிதில் பயன்படுத்த முடியும்.