கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாத வெளிநாட்டு ஊழியர்களை முன்னதாகவே கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் முன்னோடி பரிசோதனைத் திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கின்றன.
அந்தப் பரிசோதனையின் மூலம் அரை மணிக்குள்ளாகவே முடிவுகள் தெரிந்துவிடும்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை பிசிஆர் முறைப்படி பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.
புதிய பரிசோதனை முறை வழக்கமான முறைக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமான பரிசோதனை முறையின் கீழ், முடிவுகள் தெரியவர குறைந்தபட்சம் ஒரு நாள் ஆகும்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அதிவேக பரிசோதனையையும் ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளைக் காண பல அமைப்புகளும் முயன்று வருகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இப்போது முன்னோடி பரிசோதனைத் திட்டம் நடப்புக்கு வருகிறது.
தொடக்கமாக இன்று ‘எஸ்சிஎம் துவாஸ் லாட்ஜ்’ என்ற விடுதியைச் சேர்ந்த சுமார் 500 ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த முன்னோடி திட்டம் அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆன்டிஜென் விரைவு பரிசோதனை நான்கு வார காலம் பரிசோதித்து பார்க்கப்பட்டு வழக்கமான பரிசோதனையுடன் இதை ஒருங்கிணைக்க இயலுமா என்பதும் மதிப்பிடப்படும்.
முன்னோடி திட்டத்தின்போது ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஊழியர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
முடிவுகள் 30 நிமிடங்களுக்குள் தெரியவந்துவிடும்.
மூக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து திரவம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும்.
இருந்தாலும் இத்தகைய பரிசோதனைகள் வழக்கமான பிசிஆர் பரிசோதனைகளைப் போல் அவ்வளவு துல்லியமாக இருக்காது என்று தெரிகிறது. பிசிஆர் பரிசோதனைதான் இப்போது மிகவும் நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன.
முன்னோடி பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று தெரியவந்தால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.