விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூரில் கண் பராமரிப்பு திட்டம் ஒன்று நேற்று (அக்டோபர் 30) தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுதிகளில் தங்கியுள்ள 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு சார்ந்த எஸ்ஸிலார் நிறுவனம் கண் பராமரிப்பு கல்வியையும், தேவைப்படுவோருக்கு வாசிப்பு கண்ணாடியும் வழங்கும்.
எஸ்ஸிலார் நிறுவனத்தின் அறக்கொடை அங்கமான எஸ்ஸிலார் விஷன் பவுண்டேஷன், வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் இணைந்து சுமார் மூன்றாண்டுகளுக்கு செயல்படுத்தும் இந்தத் திட்டத்தின் வழியாக நல்ல பார்வை, கண் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வயதாகும்போது இயற்கையாகவே ஏற்படக்கூடிய வெள்ளெழுத்து எனப்படும் கிட்டப்பார்வைக் குறைபாடு 40 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களிடையே கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மின்னிலக்க சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள்ளேயே இருந்து பணிகளை மேற்கொண்டது போன்ற காரணங்களால், வயதானவர்களிடையே வெள்ளெழுத்து குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவின் மூத்த மருத்துவர் டாக்டர் பிளான்சி லிம் கூறினார்.
அவரது குழு எஸ்ஸிலார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கண் பராமரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களில், தேவையிருக்கும் ஊழியர்கள் இந்த வாசிப்புக் கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
கொரோனா தொற்றுப் பரவல் நிலவரம் மேம்பட்ட பிறகு வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிட்டப் பார்வை போன்ற பிரச்சினைகள் இருப்பதா என பரிசோதித்துப் பார்த்து அதற்கேற்ப கண்ணாடிகள் வழங்கப்படும்.
நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“வேலையிடத்தில் பாதுகாப்பாக இருக்க, ஊழியர்கள் குறிப்புகளை வாசிக்க முடிவதும் நல்ல பார்வைத் திறன் இருப்பதும் அவசியம்,” என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.