கொவிட்-19 (தற்காலிக நடவடிகைகள்) சட்டத்திற்கான 3வது தொகுப்பு உத்தேசத் திருத்தங்களை நேற்று நாடாளுமன்றம் அவசரமாக நிறைவேற்றியது.
அந்தத் திருத்தங்கள் சிறு, நுண் நிறுவனங்கள் தெண்டத் தொகையில்லாமல் குறிப்பிட்ட வர்த்தக ஒப்பந்தங்களை முடித்துக்கொள்ள வகைசெய்கின்றன.
நாடாளுமன்றத்தில் அவை நேற்று இரண்டாவது வாசிப்புக்கு வந்தபோது இரண்டாவது சட்ட அமைச்சர் எட்வின் டோங், இத்தகைய ஓர் ஏற்பாடு அத்தகைய நிறுவனங்களுக்கு உயிர்கொடுக்கும் ஒன்றாக இருக்கும் என்று விளக்கினார்.
இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றை நடத்தும் ஒருவர், மார்ச் முதல் செயல்பட முடியவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை அவரது தொழில் குத்தகைக் காலம் நீடிக்கும் என்பதால் அது வரைப்பட்ட தொகையை அவர் செலுத்தியாக வேண்டும். இதனால் அவருக்கு கடன் அதிகரிக்கும்.
நடுவில் உடன்பாட்டை முடித்துக்கொள்ள வேண்டுமானால் சில நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய $250,000 செலுத்த வேண்டி இருக்கும்.
இத்தகைய நிறுவனங்கள் புதிய நிபந்தனைகளின் கீழ் இணக்கம் காண முடியாத பட்சத்தில் அவற் றுக்கு இந்தப் புதிய ஏற்பாடு பலன் தரும் என்று அமைச்சர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட வருவாய் வரம்பைக் கொண்ட சிறு, மிகச்சிறு நிறுவனங்களை இந்தப் புதிய ஏற்பாடு உள்ளடக்கும். அதோடு அந்த நிறுவனங்களின் வருவாய் கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும்.
துணைச் சட்டம் ஒன்றில் விவரங்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் சட்டப்படி செய்து கொண்டிருக்கும் உடன்பாடுகளை மட்டும் இந்தப் புதிய ஏற்பாடு உள்ளடக்கும். அத்தகைய ஒப்பந்தங்கள் மார்ச் 25க்கு முன்பு செய்து கொண்டிருக்க வேண்டும். நவம்பர் 2க்கு பிறகு முடிவடையவேண்டும்.
ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள தரப்புகளில் ஒரு தரப்பு சிங்கப்பூரில் தொழில் நடத்த வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் வர்த்தகச் சொத்துகள் சம்பந்தப்பட்ட குத்தகைகளாக அல்லது உரிமங்களாக இருக்கலாம்;
பொருள் சேவை விற்பனை மற்றும் கொள்முதல்; வர்த்தக சாதனங்கள் மற்றும் வாகனங்களுக்கான வாடகை உடன்பாடுகளாக, வர்த்தக சாதனங்கள் மற்றும் வாகனங்களுக்கான தவணைக் கொள்முதல் அல்லது நிபந்தனைகளுடன்கூடிய விற்பனை உடன்பாடுகளாக அவை இருக்கலாம்.
இந்தப் புதிய ஏற்பாட்டில் இருந்து சில குறிப்பிட்ட உடன்பாடுகள் விலக்கப்பட்டு இருக்கின்றன. பயனீட்டாளர், வேலை நியமனம், காப்புறுதி உடன்பாடுகள் இவற்றில் அடங்கும்.
திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்ததும் நிறுவனங்கள் ஆறுவார காலங்களுக்குள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
புதிய நிபந்தனைகளின் பேரில் இணக்கம் இல்லை என்றால் ஒப்பந்தங்களைத் தெண்டத் தொகை இல்லாமல் முடித்துக்கொள்ள முடியும். இருந்தாலும் அந்த ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட முந்தைய கடன் பொறுப்புகளை இன்னமும் நிறைவேற்ற வேண்டி இருக்கும்.
புதிய ஏற்பாட்டிற்கு நிறுவனங்கள் தகுதி பெறுவது தொடர்பில் அல்லது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதன் பேரில் கொடுக்கப் படவேண்டிய தொகை தொடர்பில் யாருக்காவது இணக்கம் இல்லை என்றால் அவர்கள் சட்ட அமைச்சு நியமிக்கும் மதிப்பீட்டாளர் உதவியுடன் இறுதி முடிவை எட்டலாம்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் ஏப்ரல் முதல் முதலாவதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் சில குறிப்பிட்ட ஒப்பந்தக் கடப்பாடுகளை தெண்டத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லாமல் ஆறு மாதம் ஒத்திவைக்க அச்சட்டம் வகை செய்தது.
ஆனால் இத்தகைய நிவாரண காலத்தையும் நடவடிக்கைகளையும் காலவரம்பின்றி நீட்டிக்க முடியாது என்பதால் நிறுவனங்கள் குறிப்பாக சிறிய நிறுவனங்கள் மீட்சி அடைய வேண்டும் என்பதில் அரசாங்கம் ஒருமித்த கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.
குறிப்பிட்ட சிறிய நில உரிமையாளர்கள் கூடுதல் இழப்பீட்டை பெறும் வகையில் விதிவிலக்கு இருக்கும்.
வர்த்தக சாதனங்களை, வாகனங்களை வாடகைக்கு எடுப்பவர்கள், வாடகைக்குக் கொடுப்பவர்கள் உடன்பாட்டை முடித்துக்கொள்வதற்குப் பதிலாக தங்களுடைய கடனை ஆண்டுக்கு 5% வட்டியுடன் அடைக்க 18 மாதம் வரை கால அவகாசம் இருக்கும்.
இந்த விருப்ப உரிமை சில நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவசியமானது என்றார் அமைச்சர்.

