கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு RRT எனப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இம்மாதம் 4ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவை நேற்று (நவம்பர் 6) தெரிவித்தன.
தொற்றுநோய்களைக் கையாளும் நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே இந்த விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சுகள் தெரிவித்தன.
கொவிட்-19லிருந்து விடுபட்ட பெரும்பாலானவர்களின் உடலில் சமன்படுத்தும் ஆன்டிபாடிகள் உட்பட நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகள், சுமார் 180 நாட்களுக்கு இருக்கும் என அண்மைய அறிவியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து பார்த்தால், கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்ட ஊழியர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறைவாகவே இருப்பதாக இரு அமைச்சுகளும் குறிப்பிட்டன.
சிங்கப்பூரில் கொவிட்-19லிருந்து குணமடைந்த யாருக்கும் இதுவரை மீண்டும் தொற்று ஏற்படவில்லை.
இருப்பினும், கொவிட்-19 தொற்று ஏற்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு தொடர்ந்து கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கொவிட்-19 மறுதொற்று ஏற்படுகிறதா என்பதை ஆராய்ந்து, பரவலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க இது உதவும் என்றும் அமைச்சுகள் தெரிவித்தன.
விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள், கட்டுமானம், கப்பல் பட்டறை, பதனீடு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் இரு வாங்களுக்கு ஒரு முறை RRT எனப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி அறிவித்தனர்.
மேலும், கொவிட்-19 தொற்றி, குணமடைந்த ஊழியர்கள் தொற்று ஏற்பட்டு 180 நாட்களுக்குள், புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. முன்பு, அந்த கால வரையறை 150 நாட்களாக இருந்தது.
கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நோயெதிர்ப்பு திறன் குறைந்து மீண்டும் தொற்று ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மீண்டும் RRT பரிசோதனைகள் மேற்கொள்வது பற்றி அதிகாரிகள் முடிவு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.