சிங்கப்பூரில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் இணைந்து தயாரிக்கும் தடுப்பு மருந்துகளின் முதல் விநியோக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்க்டியூரஸ் தெராப்டிக்ஸ் எனும் அமெரிக்க மருந்து தயாரிபு நிறுவனம் சிங்கப்பூரின் டியூக் -என்யுஎஸ் ஆய்வாளர்களுடன் இணைந்து தடுப்பு மருந்து தயரிப்பில் ஈடுபட்டுள்ளது. அந்தத் தடுப்பு மருந்தின் முதல்கட்ட மருந்தகப் பரிசோதனை முடிவுகள் சாதகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கழகம் சுமார் $60.5 மில்லியன் (US$45 மில்லியன்) தொகையை தடுப்பு மருந்து தயாரிப்புக்காக செலவிடுவதாக ஆர்க்டியூரஸ் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் US$175 மில்லியன் வரை தடுப்பு மருந்துகள் வாங்க உரிமை பெற்றுள்ளது என்றும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மருந்துகள் விநியோகம் இருக்கும் என்றும் ஆர்க்டியூரஸ் தெரிவித்தது.
தங்களது கூட்டுமுயற்சிகளில் உருவான தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே செயல்திறன்மிக்கதாக இருப்பதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன என்று சொன்னார் டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் ஊய் எங் இயோங்.
முக்கிய பொதுச் சுகாதார நலன்களை வழங்கும் ஆற்றலைத் தங்களது தடுப்பூசி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் நிதி தங்களது நிறுவனத்திற்குக் கூடுதல் வளங்களை வழங்கும் என்றார் ஆர்க்டியூரஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆண்டி சஸீன். அதன்மூலம் இப்போதைய உடன்பாட்டின்படி இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேவைகளை நிறைவுசெய்வதுடன் மற்ற நாடுகளுக்கும் அடுத்த ஆண்டில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையடுத்து, கொரோனா தடுப்பூசி உருவாக்கத்திற்கான போட்டி சூடுபிடித்துள்ளது.
அண்மையில், தங்களது தடுப்பூசி 90% செயல்திறன்மிக்கதாக உள்ளது என்று ‘ஃபைஸர்-பயோஎன்டெக் எஸ்இ’ நிறுவனங்கள் அறிவித்திருந்தன. பாதுகாப்பு தொடர்பான தரவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் கிடைத்துவிடும் என்றும் அவை தெரிவித்தன.