கொவிட்-19 தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர், அடுத்த வாரம் முதல் புதிய நிபந்தனைக்கு உட்படுத்தப்படுவர்.
அவர்கள் தங்களின் பயணத்திற்கு முன்னதாக குறைந்தது 72 மணி நேரத்துக்குள்ளாக ‘பிசிஆர்’ எனப்படும் பல்படியத் தொடர்வினை பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும்.
பின்னர் சிங்கப்பூர் வந்தடைந்ததும் 14 நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று (நவம்பர் 10) தெரிவித்தது.
உத்தரவுக் காலம் முடிவடைந்ததும் அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இப்புதிய கட்டுப்பாடு நவம்பர் 17, இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வருகிறது.
இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இப்புதிய நிபந்தனை பொருந்தாது. அத்துடன் கிருமி அபாயம் குறைவாக உள்ள நாடுகளான புரூணை, நியூசிலாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா, சீனா போன்றவற்றிலிருந்து வருகை அளிப்போருக்கும் புதிய கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
“கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, வெவ்வேறு நாடுகளும் வட்டாரங்களும் பலன் தரக்கூடிய செயல்முறைகளை நடப்பில் கொண்டு வருவதில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
“இதை நாங்கள் அறிவோம். அதனால் சிங்கப்பூரின் எல்லைத் திறப்புக் கட்டுப்பாடுகளுக்கு, கிருமி அபாயம் அடிப்படையிலான அணுகுமுறையை நாங்கள் கையாளவிருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து வருவோரிடையே கிருமித்தொற்று உறுதியாவதையும் அது சமூகத் தொற்றுக்கு வழி வகுப்பதையும் பொறுத்து இந்த அணுகுமுறை அமைந்திடும்,” என்று சுகாதார அமைச்சு நேற்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
கிருமி அபாயம் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வருவோர், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று, சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அல்லது, ஏழு நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவை அவர்கள் நிறைவேற்றி அதன் இறுதியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள வருகையாளர்கள், 14 நாட்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவுக் காலத்தை ஒதுக்கப்பட்ட வளாகங்களில் தங்கி நிறைவேற்ற வேண்டும். அது வீடாகவும் இருக்கலாம். ஆனால் அங்கு வேறு எவரும் வசிக்க முடியாது.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், மேலும் ஒரு நிபந்தனை குறித்தும் நேற்று பேசினார்.
சிங்கப்பூர் வருவோர், வீட்டில் இருக்கும் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைக் கண்காணிக்க மின்னியல் கருவிகளை அணிந்திருக்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் அதன் மூன்றாம் கட்டத் தளர்வுநிலையை நோக்கிச் செல்ல, அபாயம் அளிக்கக்கூடிய இரு பெரும் அம்சங்கள் கண்காணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன்று, வெளிநாடுகளிலிருந்து வருவோரால் கிருமி அபாயம், மற்றொன்று உள்ளூர் சமூகத் தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்.
எல்லைத் திறப்பு குறித்தும் திரு வோங் கருத்துரைத்தார்.
“சிங்கப்பூர் சிறிய நாடு. உலகத்துடன் தொடர்பில் இருக்கும் தேவை நமக்கு இருக்கவே செய்கிறது. பொருளியல் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, சமூக மற்றும் சமுதாயத் தேவைகளுக்கும் அந்த இணைப்பு தேவைப்படுகிறது. குடும்பங்களும் ஒன்றுசேர நாம் அனுமதிக்க வேண்டும். நம் அன்பிற்குரியவர்களைக் கவனித்துக்கொள்ளும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கும் நாம் உதவ வேண்டும்,” என்றார் அவர்.
வீட்டில் இருப்பதற்கான உத்தரவு காலத்தின்போதும் சமூகத்திலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும், வெளிநாடுகளிலிருந்து வருவோரிடையே கொவிட்-19 கிருமித்தொற்று பதிவானதாகவும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
இத்தகைய பயணிகள், சிங்கப்பூர் வருவதற்கு முன்பாகவே கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்வது கூடுதலான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என்றார் திரு வோங்.