பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம் 2024ல் தயாராகிவிடும். சுமார் 40 விழுக்காட்டு பணிகள் முடிவடைந்துவிட்டன.
இப்போதுள்ள பொங்கோல் ரயில் நிலையத்தில் இருந்து எதிர்கால பொங்கோல் கோஸ்ட் நிலையத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கத்தைத் தோண்டும் பணி முடிவடைந்துவிட்டது. அந்த நிறைவு நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
நார்த் ஈஸ்ட் வழித்தடத்தின் 1.6 கி.மீ. விரிவாக்கமாக அமையும் அந்தப் புதிய நிலையம் 2023ல் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொவிட்-19 காரணமாக அது தாமதமடைந்துள்ளது.
அந்த நிலையம், இப்போது உருவாகி வரும் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்குப் பயணிகள் சென்றுவர சேவையாற்றும்.
தொழிற்பேட்டையாக திகழக்கூடிய அந்த மின்னிலக்க வட்டாரத்துடன் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பயிலக வளாகமும் அங்கு அமையவிருக்கிறது.
புதிதாக அமையவிருக்கும் பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம் தேவையான ஒன்று என்று திரு ஓங் தம் உரையில் குறிப்பிட்டார்.
மக்கள் செல்ல முடியாத வகையில் புதிய ஒரு வட்டாரத்தை உருவாக்குவதில் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் மூலம் உருவாகக்கூடிய அறிவார்ந்த வாழ்க்கைப்பாணி, தரமிக்க கல்வி, நல்ல வேலை ஆகியவற்றுக்குத் தோதாக புதிய நிலையம் அமைந்திருக்கும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்த நிலையம், புதிய பொங்கோல் தொழிற்பேட்டையில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள், அந்த வட்டார மக்கள் ஆகியோர் அடங்கிய 75,000 பேருக்கும் அதிகமானவர்களுக்குச் சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பை 230 கி.மீ. என்ற அளவில் இருந்து 360 கி.மீ. என்ற அளவுக்கு 2030களின் தொடக்கத்தில் விரிவுபடுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம்.
சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களில் 10ல் எட்டு குடும்பங்கள் 10 நிமிடத்தில் நடந்து ஒரு எம்ஆர்டி நிலையத்தை எட்டிவிடக்கூடிய வசதி இருக்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது.

