பிடோக் நார்த்தில் புதிய ஒருங்கிணைந்த மருத்துவமனை 2030ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்படும். இந்த மருத்துவமனை கிழக்குப் பகுதி குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (நவம்பர் 13) தெரிவித்தார்.
பிடோக் நார்த் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் அந்த மருத்துவமனை அமைந்திருக்கும்; பிடோக் ரிசர்வாயர் ரோடும் பிடோக் நார்த் ரோடும் புதிய மருத்துவமனையைச் சூழ்ந்து இருக்கும். புதிய மருத்துவமனை வளாகத்தில், பொது மருத்துவமனை மற்றும் சமூக மருத்துவமனை சேவைகளை மக்கள் பெறலாம் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அவசர சேவை, உள்நோயாளி மற்றும் சிறப்பு வெளிநோயாளிச் சேவைகளை பொது மருத்துவமனை வழங்கும்.
புதிய வளாகத்தில் அமைந்திருக்கும் சமூக மருத்துவமனை, பொது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படும் நோயாளிகளுக்கு மறுவாழ்வையும் தேவைப்படும் இதர பராமரிப்புச் சிகிச்சைகளையும் வழங்கும்.
சிங்கப்பூரில் பொது மருத்துவமனையும் சமூக மருத்துவமனையும் சேர்ந்து செயல்படும் இதர பல சிகிச்சை நிலையங்கள் உள்ளன.
பிடோக்கில் அமையும் புதிய மருத்துவமனையை சிங்ஹெல்த் நிறுவனம் நிர்வகித்து நடத்தும் என்று ஊட்ரம் சமூக மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் திரு கான் தெரிவித்தார்.
புதிய மருத்துவமனை சமூகத்தின் தேவைகளைத் தலைசிறந்த முறையில் எப்படி நிறைவேற்றலாம் என்பது பற்றி புதுப்புது யோசனைகளைச் சேர்ந்து உருவாக்கும் வகையில் சுகாதார அமைச்சும் சிங்ஹெல்த் நிறுவனமும் மக்களை ஈடுபடுத்தும் என்றும் அத்தகைய யோசனைகள் தயாராகும்போது மேல் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள்தொகை பெருக்கம், மூப்படைதல் காரணமாக சுகாதாரப் பராமரிப்பிற்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார் அவர்.