கொவிட்-19 காரணமாக நிறுவனங்கள் புதிய நிலவரங்களைத் தழுவிக்கொள்ளும் போதிலும் ஊழியர்களைக் கைவிட்டுவிடாமல் நல்ல முறையில் கவனித்து வரவேண்டியது முக்கியமானது என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முக்கியமான வளம் என்று அவர் வர்ணித்தார்.
“இந்தச் சிரமமான காலகட்டத்தில் ஊழியர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
“ஊழியர்களைக் குறைத்தால் செலவு குறையும் என்று திடீர் முடிவுகளை எடுத்து அவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள். ஊழியர்களை நல்லவிதமாக கவனித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களை வேலையிலேயே தக்கவைத்துக் கொள்ளுங்கள். வேறு வேலைகளில் அமர்த்துங்கள்.
“இப்படிச் செய்தால் அவர்கள் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக நடந்துகொண்டு கடனைத் தீர்ப்பார்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.
“நிறுவனங்கள் இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டு வருவதன் மூலம் பிணைப்பை நாம் வலுப்படுத்த முடியும். ஒரு நாள் மறுபடியும் நாம் செழிப்படைவோம்,” என்று திரு லீ தெரிவித்தார்.
இந்தச் சிரமமான காலகட்டத்தில் நிறுவனங்கள் வருங்காலத்தையே பார்க்க வேண்டுமே தவிர பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது என்றார் அவர்.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்புடன் (ஏபெக்) தொடர்புடைய மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் எதிர்கால உலகப் பொருளியல் வளர்ச்சி பற்றிய விவாதிப்பு ஒன்றில் திரு லீ உரையாற்றினார். அப்போது அவர் நிறுவனங்களை இவ்வாறு வலியுறுத்தினார்.
கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து உலகம் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும். அப்போதும் கூட புதிய வழமைகளில் சில மாற்றங்களும் இடம்பெறும் என்றார் அவர்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அநேகமாக 2022ல்தான் உலக மக்களில் பலரையும் அது சென்றடையும். கொவிட்-19 பரவலும் மெதுவடையும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு அனைத்துலக பயணம் வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 ஒடுங்கிய பிறகும் அதனுடைய பாதிப்புகள் நெடுங்காலத்திற்கு இருந்துவரும் என்று கூறிய திரு லீ, மக்கள் தொலைதூரத்தில் இருந்து வேலை பார்க்க, இணைய வர்த்தகத்தில் ஈடுபட, பயணங்களைக் குறைத்துக்கொள்ள பழக்கப்பட்டு இருப்பார்கள் என்றார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்றாலும் இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமர் லீ எச்சரித்தார்.
கொரோனா கிருமி மறுபடியும் தலைகாட்டு வதைத் தடுக்க அரசாங்கம் மிகக் கடுமையாகப் பாடுபட்டு வருகிறது என்று கூறிய திரு லீ, மீண்டும் முடக்கத்தை அறிவிக்கவும் அரசாங்கம் விரும்பவில்லை என்றார்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை மீண்டும் வந்தால் மக்களின் மனநிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார். இத்தகைய ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க முடிந்த வரையில் அரசாங்கம் பாடுபட்டு வருவதாகவும் திரு லீ தெரிவித்தார்.
“அரசாங்கம் வேலைகளைக் கட்டிக்காக்கவும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும் கூடுமான வரை அனைத்தையும் அரசாங்கம் செய்து வருகிறது.
“இதுவரை இல்லாத அளவுக்கு $100 பில்லியன் ஆதரவு நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பில் இருந்து $52 மில்லியன் வரை எடுத்துச் செலவிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது,” என்று திரு லீ தெரிவித்தார்.