சிங்கப்பூரில் மூளை வங்கி தொடங்கி ஓராண்டாகியிருக்கும் நிலையில், கடந்த செம்படம்பர் மாதம் 10ஆம் தேதி முதன் முறையாக 2 மூளைகள் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
சராசரியாக சுமார் 1.2 கிலோ எடையில் இருக்கும் மூளையை, ஒருவர் இறந்து 24 முதல் 48 மணி நேரத்துக்குள்ளாக, அவரது தலையின் மேல்புறம் அல்லது பின்புறம் வழியாக மிகவும் கவனத்துடன், மரியாதையுடன் மூளை அகற்றப்பட வேண்டும். இதன் மூலம் மூளை செல்களின் தரத்தை கட்டிக்காக்க முடியும். இந்த நடைமுறைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடிக்கும்.
சிங்கப்பூரில் மூளை வங்கியை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என சிங்கப்பூர் மூளை வங்கியின் மேலாளர் டாக்டர் ஜோன் சிம் கூறினார்.
ஐரோப்பியர், அமெரிக்கர்களின் மூளைத் திசுக்கள் ஆசியர்களின் மூளைத் திசுக்களிடமிருந்து வேறுபடிவதாகக் குறிப்பிட்ட டாக்டர் சிம், “நமக்கென தனியான மூளை வங்கியை வைத்திருப்பதன் மூலம் சிங்கப்பூரர்களிடையே ஏற்படும் மூளை தொடர்பான நோய்கள் பற்றிய ஆய்வுகளை நமது நோயாளிகளை வைத்தே மேற்கொள்ள முடியும்,” என்றார்.
மூளை செயல்பாடு தொடர்பான அல்ஸைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் நோய்களால் பாதிக்கப்படுவோர் இங்கு அதிகரித்து வருகின்றனர்.
இதுவரை 71 பேர் மூளை தானம் வழங்க பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்ததையடுத்து, அவர்களது மூளைகள் மூளை வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன. 21 வயதுக்கு மேற்பட்டோர் மூளை தானத்துக்கு பதிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி சிங்கப்பூரில் மூளை வங்கி தொடங்கப்பட்டது.
மூளைதானம் செய்த முதல் நபர் 70களில் இருந்த ஒரு பெண். பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வந்த அவர், தமது மற்ற உடலுறுப்புகளையும் தானம் செய்ய நினைத்ததாக அவரது சகோதரி தெரிவித்தார்.
மூளைத் திசுக்கள், மூளை திரவம் போன்றவற்றை 10 முதல் 20 ஆண்டுகள் வரை உறைநிலையில் பாதுகாக்க முடியும்.
மூளை தானம் செய்ய விரும்புவோர், 6592 6952 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது brainbanksingapore@ntu.edu.s என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.