பிரான்சிலும் மற்ற இடங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதனை அடுத்து, அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 37 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்; 16 வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தீவிரவாதப் போக்குடன் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட தற்காகவோ கலவரம் அல்லது வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துரைத்ததற்காகவோ அதிகாரிகள் 14 சிங்கப்பூரர்களையும் 23 வெளிநாட்டினரையும் விசாரித்தனர்.
குறிப்பாக அவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு ஆசிரியர் சேமுவல் பேட்டியின் தலை துண்டிக்கப்பட்டதையும் அதைத் தொடர்ந்து பிரான்சிலும் மற்ற இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களையும் ஆதரித்தனர் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை வெளியிட்ட சார்லி ஹெப்டோ எனும் பிரெஞ்சுச் சஞ்சிகையைத் தற்காத்ததற்காக அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டிவிட்டனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக இழிவான கருத்துகளைக் கூறியதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணையை முடித்தவுடன் 15 பங்ளாதேஷியரும் மலேசியர் ஒருவரும் நாடுகடத்தப்பட்டனர்.
தீவிரவாத போக்கிற்கு மாறிய மலேசியர் சிரியாவிற்கோ பாலஸ்தீனத்திற்கோ சென்று, ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.
நாடுகடத்தப்பட்ட 15 பங்ளாதேஷியர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தனர்.
அண்மையில் பிரான்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக சமூக ஊடகம் வழியாக வன்முறையை அல்லது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் கருத்துகளைப் பதிவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. எஞ்சிய ஏழு வெளிநாட்டவர்கள் மீதான விசாரணை தொடர்வதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் தாக்குதல்களையோ போராட்டங்களையோ நடத்த அவர்களில் எவரும் திட்டமிடவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
தற்போது, 19 முதல் 62 வயதுக்குட்பட்ட ஆண்கள் பத்துப் பேர், பெண்கள் நால்வர் என 14 சிங்கப்பூரர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சமய மறுவாழ்வுக் குழுவின் கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், எந்தச் சமயத்தையும் பின்பற்றும் உரிமையை வழங்கும் வகையில் சிங்கப்பூரும் பிரான்சும் சமயச் சார்பற்ற நாடுகளாக இருந்தாலும், இரு நாடுகளின் அணுகுமுறைகளும் மாறுபட்டவை என்றார்.
“தலையீடு ஏதுமின்றி பிரான்ஸ் அணுக விரும்புகிறது. ஆனால் நாங்கள் தலையிடுவோம். பேச்சு சுதந்திரமும் பொறுப்புடன் நடந்துகொள்ளும் கடமையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும் என்பது நம் நிலைப்பாடு,” என்று கூறினார் அமைச்சர்.
“சமயச் சார்பற்ற அரசாங்கம் என்ற முறையில், அனைத்துச் சமயங்களுக்கும் நாங்கள் நடுநிலையானவர்கள். ஆனால் பெரும்பான்மையினரோ சிறுபான்மையினரோ, எந்த ஒரு சமயக் குழுவையும் எவரும் தாக்கவோ அவமதிக்கவோ அனுமதிக்கமாட்டோம்,” என்று கேலாங் கதிஜா பள்ளிவாசலில் நடந்த கருத்தரங்கில் அவர் உறுதியாகச் சொன்னார்.
அண்மையில் பிரான்ஸ், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, இங்கும் அதுபோன்ற தாக்குதல் இடம்பெறாமல் தடுக்கும் விதமாக உள்துறைக் குழு பாதுகாப்பைப் பலப்படுத்தி, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
போலிஸ் படையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சுற்றுக்காவல் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன என்று அமைச்சு கூறியது.