கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு சிங்கப்பூரிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் முதன்முதலாக இடம்பெற்ற நேரடி வர்த்தகக் கண்காட்சிக்கு போக்குவரத்து, சுற்றுப்பயண நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடந்த ‘டிராவல் ரிவைவ்’ எனும் அந்த இருநாள் வர்த்தகக் கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது. அதில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கண்காட்சியாளர்கள், பங்கேற்பாளர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய உதவின.
புதிதாக உருவாக்கப்பட்ட கலப்பின நிகழ்ச்சி வர்த்தகக் கண்காட்சி மாதிரியின் கீழ் இடம்பெற்ற முதல் முன்னோடி வர்த்தகக் கண்காட்சி ‘டிராவல் ரிவைவ்’.
‘மைஸ்’ எனப்படும் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் இப்போது அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், அதைக்காட்டிலும் அதிகமானோர் பங்கேற்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த மூல முன்மாதிரி வழிவகுக்கிறது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இடம்பெற்ற சிங்கப்பூர் விமானக் காட்சிக்குப் பிறகு நடந்த முதல் நேரடி வர்த்தகக் கண்காட்சியான ‘டிராவல் ரிவைவ்’ நிகழ்ச்சியில், 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 65 பேராளர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். குழுக்களுக்கு இடையிலான கலந்துறவாடலுக்கு வரம்பு விதிக்கப்பட்டது. தொடர்புகளின் தடமறிவதற்கு ஏதுவாக அவர்களுக்கு ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளும் வழங்கப்பட்டன.
வெளிநாட்டுப் பேராளர்களும் சில உள்ளூர் கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்குமுன் விரைவு ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் மெஸ் பெர்லின் (சிங்கப்பூர்) நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 36 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
அவற்றில் ஒன்றான ‘எல்டிஆர்’ தொழில்நுட்பத் தீர்வுகள் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் கெல்வின் இயோ கூறுகையில், “ஸூம் செயலி வழியாக நூறு உரையாடல்களை மேற்கொள்வதைவிட நேரடியாக ஒரு தரமான உரையாடலை மேற்கொள்வதையே நான் விரும்புவேன்,” என்றார்.