சிங்கப்பூரர்களின் வருவாயை அரசாங்கம் அதிகரித்து இருக்கிறது.
வருமான ஏற்றத்தாழ்வை அது குறைத்து இருக்கிறது. அதே நேரத்தில் வீடு, சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தொடர்ந்து கட்டுப்படியாகக்கூடிய அளவில் அது நிலைநாட்டி வந்திருக்கிறது.
தொழில்துறைத் தோழனாகத் தொடர்ந்து திகழும் சிங்கப்பூர், அனைத்துலக ரீதியில் போட்டித்திறனோடும் விளங்குகிறது.
இவை எல்லாம் 2019 பொதுச் சேவையின் முக்கிய சாதனைகளில் இடம்பெற்றுள்ளன.
நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட புதிய அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் பொதுச் சேவையின் செயல்திறன் அறிக்கை இரண்டாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.
‘சிங்கப்பூர் பொதுச்சேவை செயல்திறன் மதிப்பாய்’ என்ற அந்த அறிக்கை பொருளியல், சமூக ஆதரவு போன்ற துறைகளில் முக்கிய புள்ளிவிவரங்களைத் தொகுத்துக் கூறுகிறது.
முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு மதிப்பாய்வில் கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டத்தில் முழு நாடும் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவே ஒரு சிறப்புப் பிரிவு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
‘ஒரே மக்களாக முன்பைவிட வலுவாக தலை நிமிர்வோம்’ என்ற தலைப்பிலான அந்தச் சிறப்புப் பிரிவு, சிங்கப்பூரர்களும் நிறுவனங்களும் சமூகமும் அரசாங்கத்துடன் சேர்ந்து தேவைப்படுவோருக்கு உதவியதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மதிப்பாய்வு அறிக்கையில் நான்கு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. ‘வருவாய் ஏற்றத்தாழ்வு குறைவு, அதிகமான வேலை வாய்ப்புகள்’ என்பது அவற்றில் ஓர் அம்சம். ஐந்து ஆண்டுகளிலேயே முதன்முதலாக 2019ல் வருவாய் ஏற்றத்தாழ்வு 0.4 என்ற அளவிற்கும் குறைவாக இறங்கி 0.398 ஆக இருந்தது.
அதேவேளையில், வேலை வாய்ப்புகளில் அனைத்தையும் தழுவிய நிலையில் ஆக்ககரமான போக்கு தென்பட்டது. கீழ்நிலை யைச் சேர்ந்த 20 விழுக்காட்டினர், நடுத்தர பிரிவைச் சேர்ந்தவர்களைவிட வேகமாக மேல் எழுந்தனர். வேலையில் சேர்ந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள்.
புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகளும் சிங்கப்பூரர்களுக்கு இருந்தன. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்களால் சென்ற ஆண்டு முடிவு வாக்கில் 500,000 மக்களும் 14,000 நிறுவனங்களும் பயனடைந்திருந்தன.
ஆனால் நாட்டின் மொத்த கருவள விகிதம் சென்ற ஆண்டில் 1.14 ஆகக் குறைந்தது. குழந்தை களைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.
உலகிலேயே மிகவும் போட்டித்திறன் வாய்ந்த பொருளியல்களில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருப்பதாக 2019ல் ‘உலகப் பொருளியல் அரங்கம்’ என்ற அமைப்பும் 2020ல் ‘அனைத்துலக நிர்வாக மேம்பாட்டுக் கழகம்’ என்ற அமைப்பும் தெரிவித்தன.
கொவிட்-19 சூழலிலும் பொருளியல் வளர்ச்சிக் கழகம் 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் $13 பில்லியன் நிலைச்சொத்து முதலீட்டு கடப்பாடுகளைப் பெற்றது. அதிகமான நிறுவனங்கள் மின்னிலக்கமயமாயின. உலகிலேயே அதிக திறன் வாய்ந்த ஊழியர் அணியைக் கொண்ட 10 நாடுகளின் பட்டிய லில் உள்ள ஆசியாவைச் சேர்ந்த ஒரே நாடு சிங்கப்பூர்தான்.
தொழில்களைத் தொடங்கி நடத்துவதற்குத் தோதான சூழலும் மின்னிலக்கச் சேவைகளை எட்டுவதற்கு வசதியான ஏற்பாடுகளும் சிங்கப்பூரில் வெகுசிறப்பாக உள்ளதாக உலக வங்கியின் அட்டவணை குறிப்பிடுகிறது.
கொவிட்-19 காரணமாக வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் மெதுவடைந்துள்ளன. கொரோனா வும் உலகில் பதற்றமும் நிலவி வரும் கட்டத்தில், குடிமக்களும் நிறுவனங்களும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்கால கொள்கைகளை உருவாக்க வேண்டியது முக்கியமானது என்கிறது அறிக்கை.
சிறந்த எதிர்கால சிங்கப்பூர் சமூகத்தையும் பொருளியலையும் சாதித்து வலுவாக தலை நிமிரசிங்கப்பூரர்களுடன் சேர்ந்து அரசாங்கம் பாடுபடும் என பொதுச் சேவைத் தலைவர் லியோ யிப் உறுதிகூறி இருக்கிறார்.