சிங்கப்பூரில் இந்த வாரத்தில் நான்கு நாட்களில் கட்டுமானம் மற்றும் கடல்துறையில் 3 வேலையிட உயிர்பலி விபத்துகள் நிகழ்ந்துவிட்டன.
இதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ள வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றமும் சிங்கப்பூர் ஒப்பந்தக்காரர்கள் சங்க நிறுவனமும் (SCAL) கட்டுமான தொழில்துறைக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன.
அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களும் ஊழியர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை எல்லாம் முற்றிலும் பரிசோதித்து ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக அவற்றைச் சரிசெய்யவேண்டும் என அவை கோரிக்கை விடுத்துள்ளன.
வேலையிடங்களில் பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்பதையே இந்த விபத்துகள் காட்டுவதாக வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றத்தின் தலைவர் ஜான் இங் கூட்டறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் தொழில்துறை முழுவதும் ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக கொவிட்-19 சூழலில் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பி இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் வேலையிடங்களில் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடக் கூடும். ஆண்டு முடிவு நெருங்குவதால் நிறுவனங்களும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். இந்தச் சூழ்நிலையில் அவை பாதுகாப்பை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
கட்டுமான நிறுவனங்கள் அனைத்தும் வேலைகளை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் துல்லியமாக நூற்றுக்குநூறு பரிசீலித்து அலசி ஆராய்ந்து குறை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கட்டுமானக்காரர்கள் சங்க நிறுவனத் தின் தலைவர் இங் யெக் மெங் தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக பல நாள் வேலையில்லாமல் இருந்துவிட்டு இப்போது வேலைக்குத் திரும்பி இருக்கும் மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட வாய்ப்பு இருப்பதை அவர் சுட்டினார்.
ஆகையால் முதலாளிகள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, கடந்த அக்டோபரில் ஜூரோங் ஏரி தோட்ட கட்டுமான வேலையிடத்திற்குச் சென்றிருந்தார். வேலையிட பாதுகாப்பும் சுகாதாரமும் மிக முக்கியமானவை என்பதை அவர் அப்போது வலியுறுத்தினார். அதை அறிக்கைச் சுட்டிக்காட்டியது.
நிறுவனங்கள் மீண்டும் பணிகளைப் பாதுகாப்பான முறையில் தொடங்க உதவும் வகையில் பல ஏற்பாடுகளும் வளங்களும் இருப்பதை சுட்டிய அறிக்கை, பாதுகாப்பான முறையில் மறுபடியும் வேலைகளைத் தொடங்குவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முழுமையாக நிறுவனங்கள் அமலாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

