முன்னாள் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூ வாழ்ந்த எண் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்கக்கூடாது என்று தமது அமைச்சர்கள் கூடி எடுக்கும் முடிவை மாற்றும் சுதந்திரம் தமக்கு இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
‘தி ஆன்லைன் சிட்டிசன்’ என்ற இணையத்தளத்தின் ஆசிரியரான டெரி ஸுக்கு எதிரான அவதூறு வழக்கின் இரண்டாம் நாளான நேற்று சாட்சியமளித்த பிரதமர் லீ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமது தந்தையான திரு லீ குவான் இயூ, பிரதமரான தாம் கருத்தில்கொள்ள வேண்டிய அம்சங்களையும் பிரதமர் என்ற முறையில் தமக்குள்ள கட்டுப்பாடுகளையும் நன்கு அறிந்திருந்ததாகக் கூறிய திரு லீ, குடும்ப சொத்து தொடர்பான விவகாரத்தில் தாமே முடிவுகள் அனைத்தையும் எடுப்பதாக திரு டெரி ஸுவின் வழக்கறிஞர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்தார்.
திரு டெரி ஸு தமது இணையத்தள கட்டுரையில், எண் 38 ஆக்ஸ்லி சாலை வீடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தவறாக நம்ப வைத்ததாக பிரதமரின் சகோதரி டாக்டர் லீ வெய் லிங் கூறியதை மேற்கோள் காட்டியிருந்தார். இது தொடர்பாக திரு டெரி ஸு மீது பிரதமர் லீ தொடர்ந்த அவதூறு வழக்கில் தற்பொழுது அவர் சாட்சியமளித்து வருகிறார்.
அமைச்சர்கள் எடுக்கும் முடிவை பிரதமர் என்ற முறையில் ஏன் திரு லீயால் மாற்ற முடியாது என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த திரு லீ, தமது தந்தையின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக தமது அமைச்சர்களின் முடிவுக்கு மாற்றாக செயல்படுவது என்று முற்பட்டால், பிரதமர் என்ற முறையில் தாம் கடமையைச் செய்வதாக மேற்கொண்ட பிரமாணத்திற்கு எதிராக செயல்படுவதாகும் என்றார்.
அது சிங்கப்பூருக்கு எதிரான செயலாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், வீடு தொடர்பாக அரசாங்கம் என்ன முடிவு எடுக்கக்கூடும் என்ற தமது மதிப்பீட்டை தாம் தமது தந்தை திரு லீ குவான் இயூவிடம் கூறியதாக பிரதமர் விளக்கினார்.
“நீங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறீர்கள். அவர்களின் கருத்துகளை கேட்டுத் தெரிந்து ைவத்துள்ளீர்கள். அவர்கள் இவ்வாறு எண்ணம் கொண்டு இருக்கையில், பொதுமக்களும் அதே கருத்தைக் கொண்டுள்ளபோது, அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்கள் கூறிய கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு என்னால் அந்த வீட்டை இடிக்க முடியாது.
“அந்த வீடு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
“அப்படி நான் பிரதமராக இல்லாமல், அமைச்சரவைக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்காத நிலையில், அந்த வீடு அரசிதழில் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று நான் அவருக்கு விளக்கினேன். அவர் புரிந்துகொண்டார்,” என்று பிரதமர் லீ சாட்சியமளித்தார்.