அமெரிக்க உயிர்தொழில்நுட்ப நிறுவனமான மோடர்னா, அதன் தயாரிப்பிலான கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டால், மோடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து இந்த மாதத்திலேயே சிங்கப்பூருக்குக் கிடைக்கக்கூடும்.
சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணைய (HSA) அதிகாரிகளுடன் பேசி வருவதாக மோடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபானி பேன்செல் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அதிகாரிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குவதால் நாங்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பார்கள்,” என்றார் அவர்.
மோடர்னா நிறுவனம் வழங்கிய தகவல்களை ஆராய்ந்து வருவதாக HSA தெரிவித்தது.
ஆரம்பக்கட்ட தரவுகளை மோடர்னா நிறுவனம் வழங்கியிருப்பதாகவும் கூடுதல் தகவல்களை ‘ரோலிங் சப்மிஷன்’ முறையில் பரிசோதனைகள் நடத்தப்படும்போதே, அவ்வப்போது வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் HSA தெரிவித்தது.
எவ்வளவு ‘டோஸ்’ தடுப்பு மருந்துகள் சிங்கப்பூருக்கு வழங்கப்படும் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அங்கீகாரம் வழங்கப்பட்டதும் மருந்துகள் உடனடியாக விநியோகம் செய்யப்படும் என்றார் அவர்.