ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்காக அங்கீகாரம் அளித்த முதல் நாடாக பிரிட்டன் உள்ளது. அடுத்த வாரத் தொடக்கத்தில் பிரிட்டனுக்கு தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.
கொரோனா தொற்றுப் பரவலால் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழந்த நிலையில், அனைத்துலக அளவில் பொருளியலும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. வாழ்க்கையை வழக்கநிலைக்குக் கொண்டுசெல்ல தடுப்பு மருந்துதான் சிறந்த தெரிவாகக் கருதப்படுகிறது.
“தற்சார்பு அமைப்பான MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பொருட்களின் ஒழுங்குபடுத்தும் முகவை ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு பரிந்துரைத்துள்ளதையடுத்து, அந்த மருந்தின் பயன்பாட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது,” என இன்று (டிசம்பர் 2) பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.
அடுத்த வாரம் முதல் இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கு முதலில் தடுப்பு மருந்து வழங்குவது என்பதை பிரிட்டனின் தடுப்பு மருந்து குழு முடிவு செய்யும். பராமரிப்பு இல்லவாசிகள், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள், வயதானவர்கள், மருத்துவரீதியாக அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.