சிங்கப்பூர் ராணுவ வீரர்களுக்கு மேம்பட்ட தலைக்கவசங்களும் ராணுவக் கருவிகளைத் தாங்கும் சாதனங்களும் வழங்கப்படுகின்றன.
இவ்வாண்டு ஜனவரியில் இருந்து, கமாண்டோ, காலாட் படை, காவல் படை போன்ற போர்ப் பிரிவுகளில் உள்ள முழு நேர தேசிய சேவையாளர்களுக்கு, ராணுவக் கருவிகளைத் தாங்கும் மேம்பட்ட சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உடல்வாகுக்கு ஏற்ற, உடல் சூட்டைத் தணிக்கும் இந்த மேம்பட்ட சாதனங்கள், ராணுவ வீரர்களின் போர் தயார்நிலையை மேம்படுத்த உதவும்.
வீரர்களின் ராணுவக் கருவிகளைத் தாங்கும் ‘ஸ்டாண்டர்ட்’, ‘என்ஹான்ஸ்ட்’ எனும் இருவகை சாதனங்கள் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ள சாதனத்திற்குப் பதிலாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
போர் ஆதரவு உள்ளிட்ட மற்ற பிரிவுகளில் இருக்கும் முழு நேர தேசிய சேவையாளர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து ‘ஸ்டாண்டர்ட்’ வகை சாதனங்கள் வழங்கப்படும்.
சிங்கப்பூர் ராணுவம் இம்மாதம் அதன் 55வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் லோயாங் பகுதியில் உள்ள செலராங் முகாமில் ராணுவ வீரர்களுக்கான புதிய தலைக்கவசமும் ராணுவக் கருவிகளைத் தாங்கும் சாதனமும் செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட்டன.
வெளிப்புற சூழலில் ராணுவப் பயிற்சிக்குத் தேவைப்படும் தோட்டாக்கள், தொடர்புச் சாதனங்கள், தண்ணீர் போத்தல்கள் போன்றவற்றை வீரர்கள் தாங்குவதற்கு இந்தப் புதிய சாதனம் வகை செய்கிறது.
மேற்கூறப்பட்ட இருவகை சாதனங்களில் இடைவாரும் சேர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதி தோள்பட்டையிலும் மறுபகுதி இடுப்பிலும் அணியப்படுகிறது. உடல்வாகுக்கு ஏற்றவாறு சரிசெய்துகொள்ளும் வசதி இருவகை சாதனங்களிலும் உண்டு.
கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து ராணுவ வீரர்களின் பயிற்சிக்கு இடைவார் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. அடுத்தடுத்த பயிற்சிகளுக்காக மற்ற பிரிவுகளுக்கு அவர் செல்லும்போது அவர்களிடம் ‘ஸ்டாண்டர்ட்’ அல்லது ‘என்ஹான்ஸ்ட்’ மேல்சட்டை வழங்கப்படலாம்.
ராணுவக் கருவிகளைத் தாங்கும் இந்தச் சாதனங்கள் வலுவான, அதே வேளையில் இலகுவான பொருளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை ராணுவ வீரர்களுக்கு சௌகரியத்தைத் தருவதோடு 30 விழுக்காடு அளவு சூட்டைத் தணிக்கவும் உதவுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து வழங்கப்பட்டு வரும் புதிய தலைக்கவசம், முந்தைய வகையைவிட ஏறத்தாழ 10 விழுக்காடு எடை குறைவு.
தொடர்புச் சாதனங்கள், இரவில் பார்க்க உதவும் சாதனங்கள் போன்ற தலையில் அணியக்கூடிய சாதனங்களுடன் சேர்ந்து இந்தத் தலைக்கவசம் அணிவதற்குப் பொருத்தமாக இருக்கும்.
ராணுவ வீரர்களின் செயல்திறனுக்கான உன்னத நிலையத்தின் தலைவரான லெஃப்டினண்ட் கர்னல் ஹோ சீ லியோங், இந்தப் புதிய சாதனம் வீரர்களுக்கு சௌகரியத்தைத் தருவதோடு அவர்களது போர் ஆற்றலை மேம்படுத்தும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.